கருங்கல் ஊராட்சிக்கு மத்திய அரசின் நிர்மல் புரஸ்கார் விருது: கலெக்டர் வாழ்த்து
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருங்கல் ஊராட்சிக்கு மத்திய அரசின் நிர்மல் புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் கணக்கு பராமரிப்பில் தன்னிறைவு பெறும் ஊராட்சிக்கு நிர்மல் புரஸ்கார் விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த விருது பாராட்டுச் சான்றிதழ், கேடயம், மக்கள் தொகைக்கு தகுந்தவாறு நிதி ஆகியவற்றை உள்ளடக்கியது.
கடந்த 2011-2012ம் ஆண்டிற்கான நிர்மல் புரஸ்கார் விருதுக்கு கருங்கல் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. கடந்த 24ம் தேதியன்று டெல்லியில் நடந்த விழாவில் கருங்கல் ஊராட்சி தலைவர் வீராச்சாமிக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிர்மல் புரஸ்கார் விருதை வழங்கினார்.
இதையடுத்து வீராச்சாமி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலத்தை சந்தித்து தான் வாங்கிய விருதைக் காண்பித்தார். இதையடுத்து கலெக்டர் வீராச்சாமியை பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
சிறந்த நிர்வாகம் மற்றும் கணக்கு பராமரிப்புக்காக கருங்கல் ஊராட்சிக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications