மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்!

நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் 293வது வாரிசாக மதுரை ஆதீனம் அறிவித்துள்ளதற்கு சகல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை ஆதீனத்திற்குட்பட்ட கோவிலான கஞ்சனூர் சுக்கிரன் கோவிலை மீட்க வலியுறுத்தி 8 கிராம மக்கள் அணி திரண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ஆதீனம் வசம் மொத்தம் 4 கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த கஞ்சனூர் கோவில். திருவிடைமருதூர் அருகே இக்கோவில் உள்ளது.
மதுரை ஆதீனம் எடுத்த முடிவால் கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ள கஞ்சனூர், கோட்டூர், மணலூர் உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இனிமேல் மதுரை ஆதீனம் இந்தப் பக்கம் கூட வரக் கூடாது என்று ஆவேசமாக கூறியுள்ளனர்.
மேலும் சுக்கிரன் கோவிலை மதுரை ஆதீனத்திடமிருந்து மீட்பதற்காக மீட்புக் குழு ஒன்றையும் அதிரடியாக அமைத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த பிரசித்தி பெற்ற கோயிலில் அழுக்கு படிந்த மதுரை ஆதீனம் கால்படாமலிருக்க கோயிலை அரசு கையில் எடுக்க வேண்டும் . இல்லையென்றால் இந்த கோயிலை சுற்றியிருக்கும் திருவாடு துறை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், தர்மபுரம் ஆதீனம் இவை எடுத்து நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மதுரை ஆதீனத்திற்கு எதிராக 8 கிராம மக்கள் படை கிளம்பியுள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.












Click it and Unblock the Notifications