கேரளாவில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 3 கிலோ தங்க நகைகள் கொள்ளை
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு நகைக்கடையில் இருந்து 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரத்தில் உள்ளது சோனா பேஷன் ஜுவல்லரி. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை அடைத்துவிட்டு ஊழியர்களும், உரிமையாளரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். அதன் பிறகு வந்த கொள்ளையர்கள் கடையின் பின்புறம் உள்ள சுவரில் ஓட்டைப்போட்டு அதன் வழியாக கடைக்குள் நுழைந்தனர்.
பின்பு கடையில் இருந்த 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிவி்ட்டனர். நேற்று காலை கடையைத் திறந்த ஊழியர்கள் நகைகள் மாயமானதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த அவர்கள் கொள்ளையர்களை வலை வீசித் தேடி வருகிறார்கள்.