மதுரை குண்டுவெடிப்பு-மக்கள் உஷார்படுத்தியும் மெத்தனமாக இருந்த போலீஸார்!

அண்ணா நகர் குப்தா மஹால் அருகே சைக்கிளில்வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரகனூர் சுற்றுச் சாலையில், பாஜக மாநில மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் வரவுள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருப்பதுதான் பரபரப்புக்கு முக்கியக் காரணம்.
ஆனால் இந்த வெடிகுண்டுச் சம்பவத்தையே தவிர்த்திருக்கலாம் என்பதுதான் இப்போது முக்கியமாக வலம் வரும் செய்தியாகும். ஏப்ரல் 26ம் தேதியே வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த சைக்கிள் அனாதரவாக நின்றுள்ளது. இதைப் பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் போலீஸார் அதைக் கண்டுகொள்ளவில்லை என்று தெரிவிக்கிறார் குண்டுவெடித்த இடத்திற்கு அருகில் உள்ள ராமர் கோவிலுக்கு அருகே உள்ள ஒரு நிறுவனத்தின் தனியார் பாதுகாவலர் சதீஷ்.
ஏப்ரல் 26ம் தேதியே இந்த சைக்கிளை நாங்கள் பார்த்தோம். இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுத்தோம். ஆனால் அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை என்கிறார் சதீஷ்.
சதீஷின் கூற்றை உளவுப் பிரிவு போலீஸ்காரர் ஒருவர் உண்மைதான் என்றார். உள்ளூர் போலீஸார் சுதாரிப்பாக செயல்படவில்லை என்பதையும் அவர் ஒத்துக் கொண்டுள்ளார். வெடிகுண்டுச் சம்பவம் நடந்த அண்ணா நகர் பகுதியில் உதவி ஆணையராக இருப்பவர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை என்பது குறிப்பிடத்தக்கது.
டிவி செய்தியாளரும் உஷார்படுத்தினார்
இதேபோல ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றி வரும் ஒருவரும் கூட போலீஸாரை இதுதொடர்பாக உஷார்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு ஏப்ரல் 29ம் தேதி ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பாஜக தலைவர் அத்வானி மதுரை வருவதை நாங்கள் விரும்பவில்லை. ராமர் கோவில் அருகே வெடிகுண்டு வைத்துள்ளோம் என்று கூறி அவர் போனை வைத்து விட்டார்.
இதையடுத்து உடனடியாக நான் காவல்துறைக்குத் தெரிவித்தேன். அவர்களும் தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை ஆராய்ந்தனர். கீழவெளி வீதியில் உள்ள ஒரு பொது தொலைபேசியகத்திலிருந்து அது வந்ததைக் கண்டறிந்தனர். ஆனால் அதன் பின்னர் அவர்கள் தீவிரமாக விசாரிக்கத்தவறி விட்டனர் என்றார்.
மொத்தத்தில் அண்ணா நகர் போலீஸார் படு மெத்தனமாக செயல்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் அண்ணா நகர் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications