காவேரி எக்ஸ்பிரஸில் பயணித்த பெண்ணிடம் சில்மிஷம்... ரயில்வே ஊழியர் கைது!
சென்னை: மைசூரிலிருந்து வந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த தனியார் தொலைக்காட்சி பெண் ஊழியரிடம் மோசமாக நடந்து கொண்டதற்காக ரயில்வே ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
தனியார் தொலைக்காட்சி நிலையம் ஒன்றில் அட்வர்டைஸ்மென்ட் பிரிவில் பணியாற்றி வருபவர் ஷில்பா. 30 வயதாகும் இவரது கணவர் பெயர் பூங்குன்றன். நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.
தனது கணவர், குழந்தைகளுடன் மைசூர் சென்ற ஷில்பா அங்கு உறவினர்களைப் பார்த்து விட்டு காவேரி எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை திரும்பினார்.
ரயிலில் தனது குடும்பத்தாருடன் தூங்கியபடி பயணம் செய்தார் ஷில்பா. அப்போது ஜோலார்ப்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது, ஷில்பாவுக்கு எதிர் படுக்கையில் படுத்திருந்த ஒரு நபர் ஷில்பாவிடம் மோசமான முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் கண் விழித்துப் பார்த்த ஷில்பா உடனடியாக டிக்கெட் பரிசோதகரிடம் புகார் கொடுத்தார். அவர் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் லட்சுமணன் என்றும் அரக்கோணம் அவரது சொந்த ஊர் என்றும் பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையில், மெக்கானிக்காக பணியாற்றி வருவதும் தெரிந்தது. அவர் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர்.