எங்கு போனாலும் 'தாறுமாறாக திரிந்த' மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!
தர்மபுரி: எந்த இடத்திற்குப் போனாலும் பல ஆண்களுடன் பழக்கம் வைத்துக் கொண்டு தாறுமாறாக திரிந்த மனைவியைக் கண்டு பொறுக்க முடியாத ஒரு கணவர், அவரை கொடூரமாக தலையை வெட்டிக் கொலை செய்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் வீரப்பநாயக்கன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். 43 வயதான இவருக்கு சிகப்பு மல்லி என்ற பெயரில் 35 வயதில் மனைவி இருந்தார். இருவரும் கூலித் தொழிலாளிகள். இவர்களுக்கு 15 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர்.
ஒவ்வொரு ஊராக சென்று கட்டுமானத் தொழில் உள்ளிட்ட கூலி வேலையில் ஈடுபட்டு பிழைப்பு நடத்தி வந்தனர். இதுபோல சென்னையில் தங்கியிருந்து வேலை பார்த்தபோது ஏகப்பட்ட ஆண்களுடன் சிகப்பு மல்லிக்குப் பழக்கம் ஏற்பட்டது. வரைமுறையில்லாமல் அவர் கள்ளக் காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இத்தனைக்கும் கணவர் கூடவே தங்கியிருந்து கொண்டு இப்படி நடந்து வந்துள்ளார் சிகப்பு மல்லி. இதனால் மனம் நொந்து போனார் சொக்கலிங்கம். பின்னர் வேலை முடிந்ததும் மனைவியை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பினார் சொக்கலிங்கம்.
ஊருக்குப் போன பின்னர் சிகப்பு மல்லி மட்டும் கோவைக்குப் போனார். அங்கு தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். அங்கும் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. பல ஆண்களுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. தனது மனைவி கடிவாளம் இல்லாத குதிரையாக தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்கும் தகவல் சொக்கலிங்கத்தை வந்தடைந்தது. பெரும் மன வேதனை அடைந்த அவர் கோவைக்கு சென்று மனைவியை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்தார்.
ஊருக்கு வந்த பின்னர் இருவருக்கும் இடையே இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அதிகாலை நாலரை மணியளவில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு வெடித்தது. அப்போது பெரும் ஆத்திரமடைந்த சொக்கலிங்கம், மனைவி தலையை அரிவாளால் கொடூரமாக அறுத்து கொலை செய்தார். பின்னர் வி.ஏ.ஓ சம்பத்திடம் சென்று சரணடைந்தார்.
இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.