இலங்கை சென்ற எம்.பி.க்கள் குழு பிரதமரிடம் அறிக்கை தாக்கல்

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் 13 பேர் கொண்ட குழு ஏப்ரல் 16 முதல் 21-ந் தேதி வரை இலங்கையில் பயணம் மேற்கொண்டது. அங்கு தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளை பார்வையிட்டது. இந்தியாவின் நலத் திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளிலும் எம்.பி.க்கள் குழு பங்கேற்றது.
இக்குழு இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து தாங்கள் சேகரித்த விவரங்களை அறிக்கையாக கொடுத்தனர். பிரதமருடனான சந்திப்பு 45 நிமிட நேரம் நடைபெற்றது. இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், ஒன்றுபட்ட இலங்கைக்குள் கண்ணியமான உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்களிடம் கூறியதை பிரதமரிடம் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசியல் தீர்வுக்கான அந்நாட்டு நாடாளுமன்ற குழுவுடன் இணைத்துக் கொண்டு தமிழ் மக்களின் பிரச்சனைக்கு உண்மையான தீர்வு காண வேண்டிய பொறுப்பு ராஜபக்சேவுக்கு இருக்கிறது என்றும் பிரதமரிடம் தாம் சுட்டிக்காட்டியதாக சுஷ்மா கூறினார்.
குழுவில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு உறுப்பினரிடம் இலங்கைப் பயணம் பற்றிய கருத்தை மன்மோகன்சிங் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போது உள்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் மற்றும் மத்திய இணை அமைச்ச வி. நாராயணசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
பிரதமருடனான சந்திப்புப் பெற்ற செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர், இருதரப்பு உறவுகளுக்கும் இடையே சிக்கலான தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய பயணம் இது என்று பிரதமர் கூறியதாகத் தெரிவித்தார். மேலும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தர இந்தியா தொடர்ந்து முயற்சிக்கும் என்றும் பிரதமர் கூறியதாக தெரிவித்தார் தாகூர்.












Click it and Unblock the Notifications