கலெக்டரை விடுவிப்பதற்காக மாவோயிஸ்டுகளுடன் சட்டிஸ்கர் அரசு ரகசிய ஒப்பந்தம்?
தமிழகத்தைச் சேர்ந்தவரான சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன், மாவோயிஸ்டுகளால் 12 நாட்களுக்கு முன்பு கடத்திச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டார். அவரை கடும் முயற்சிக்குப் பின்னர் நேற்று பத்திரமாக மீட்டது சட்டிஸ்கர் அரசு.
மாநில அரசின் தூதர்களுடன் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்ட அலெக்ஸ் பால் மேனன் நேற்று செய்தியாளர்களிடம் அதிகம் பேசவில்லை. மிகுந்த சோர்வுடன் காணப்பட்ட அவர், நான் பிறகு பேசுகிறேன். எனது விடுதலைக்காக பாடுபட்ட, முயற்சித்த, குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று மட்டும் கூறினார்.
இதற்கிடையே, கலெக்டரை விடுவிப்பதற்காக நடந்த பேச்சுவார்த்தை விவரங்களில் பல ரகசியங்கள் புதைந்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது அரசுத் தரப்பில் பகிரங்கமாக தெரிவிக்கப்பட்ட விவரங்களைத் தவிர மேலும் பல விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளதாக அச்செய்தி கூறுகிறது. இவை வெளியில் வராமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக கலெக்டர் விடுதலை தொடர்பாக அரசுத் தரப்புக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் அச்செய்தி கூறுகிறது. இதையடுத்தே கலெக்டரை விடுவிக்க மாவோயிஸ்டுகள் ஒத்துக் கொண்டதாக தெரிகிறது. மாவோயிஸ்டுகள் சிலரை விடுவி்ப்பது தொடர்பான ரகசிய ஒப்பந்தமாக இது கருதப்படுகிறது.
தற்போது பகிரங்கமாக வெளியிடப்பட்ட தகவல்களின்படி பார்த்தால் நக்சலைட்களுக்கு எந்தவிதமான லாபமும் கிடைத்தது போலத் தெரிகிறது. முதலில் 346 மாவோயிஸ்ட் கைதிகளின் பட்டியலைக் கொடுத்த நக்சலைட்கள் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தனர். அதுகுறித்து பரிசீலிப்பதாக மட்டுமே அரசு உறுதியளித்துள்ளது. இதுவரை யாரும் விடுவிக்கப்பட்டதாக தெரியவில்லை.
அதேசமயம், மாவோயிஸ்டுகள் விடுத்த கோரிக்கைப்படி ஒரு உயர் மட்டப் பரிசீலனைக் கமிட்டி உடனடியாக அமைக்கப்பட்டு விட்டதாக முதல்வர் ரமன் சிங் தெரிவித்திருந்தார். அதேசமயம், மாவோயிஸ்டுகளின் பிற நிபந்தனைகள், அதை அரசு ஏற்றதா, இல்லையா என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை.
எப்படியோ அலெக்ஸ் பத்திரமாக வந்து விட்டார். இதனால் சட்டிஸ்கர் அரசு பெரும் நிம்மதியடைந்துள்ளது. அதேசமயம், அலெக்ஸும் தனது மன உறுதியிலிருந்து சற்றும் தளராமல் இருக்கிறார். மீண்டும் சுக்மா கலெக்டராக தொடர்வீர்களா என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அரசு எங்கு பணியாற்றச் சொல்கிறதோ அங்கு பணியாற்றுவேன். எனது கடமையிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன் என்றார்.