இன்று கள்ளழகர் தசாவதாரம்- திரண்டு வரும் பக்தர்கள்

இப்ப சாமி எங்க இருக்கு ? இதுதான் மதுரையில் இரண்டு தினங்களாக பக்தர்கள் கேட்கும் கேள்வி. வைகையில் இறங்கிய அழகர் மெதுவாக ஆற்றங்கரை வழியாக வண்டியூர், தேனூர் என சென்று அங்கே மாண்டூக முனிவருக்கு விமோசனமும், நாரைக்கு முக்தியும் அளிக்கிறார். பின்னர் விடிய விடிய தசாவதார திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த நிகழ்வுகளைக் காண பல்வேறு ஊர்களில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு தேடி தேடி சுவாமியை தரிசனம் செய்ய வைக்கின்றனர் மதுரை நகர மக்கள். இதற்காவே சாமி இப்போ எங்க இருக்கு என்று கேட்டு விசாரிக்கின்றனர்.
வைகை ஆற்றில் இறங்குவதற்காக வெள்ளிக்கிழமை மாலை அழகர் மலையில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் ஞாயிறுக்கிழமை காலையில் வைகையில் எழுந்தருளினார். அழகரைக்காண காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சக்கரைக் கிண்ணத்தில் சூடம் ஏற்றி மனமுருகி வழிபட்டனர்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமராய மண்டபத்திற்கு சென்ற அழகர் அங்கு காத்திருந்த பக்தர்களுக்கு காட்சி அளித்து விட்டு வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலுக்கு சென்றார்.
திங்கட்கிழமை காலை அங்கிருந்து ஏகாந்த சேவையில் புறப்பட்ட கள்ளழகர் தேனூர் மண்டபத்திற்கு சென்று அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு மாலையில் சாபவிமோசனம் அளிக்கிறார். அதன் பிறகு நாரைக்கு முக்தி அளித்து விட்டு அங்கிருந்து மீண்டும் ராமராயர் மண்டபத்திற்கு புறப்படுகிறார். அங்கு விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மட்சம், கூர்மம், வராகம், வாமனன், நரசிம்மம், உள்ளிட்ட பத்து வித அலங்காரங்களில் காட்சி தரும் அழகரைக்காண இன்றைக்கும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications