புதுக்கோட்டையில் பரபரப்பு: நடுரோட்டில் கணவரை அடித்து உதைத்த போலீஸ்.. கதறிய மனைவி!
புதுக்கோட்டை இடைத் தேர்தல் கண்காணிப்பு என்ற பெயரில் அப்பாவி தம்பதியர் சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை என்ற பெயரில் அநாகரீகமாக போலீஸார் நடந்து கொண்டனர். இதைத் தட்டிக் கேட்ட தனது கணவரை போட்டு போலீஸார் சரமாரியாக உதைத்ததால், பயந்து போன மனைவி நடுரோட்டில் கதறி அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு மக்கள் திரண்டு விட்டனர்.
புதுக்கோட்டையில் இடைத் தேர்தல் அக்கப் போர் தொடங்கி விட்டது. இடைத் தேர்தலைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீஸாரைக் குவித்து விட்டனர். எல்லைகளில் சோதனைச் சாவடிகளையும் அமைத்துள்ளனர். இந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்தபடி உள்ளனர்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் வாக்கில், திருக்கோகர்ணம் பகுதியில் ஒரு தம்பதி காரில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரை தடுத்து நிறுத்திய போலீஸார் காரில் வெடிகுண்டு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று கூறி சோதனையிட்டனர்.
இதைக் கேட்ட காரில் இருந்த கணவர், ஏன் சார், கணவனும் மனைவியுமாக போகும்போது வெடிகுண்டுடனா செல்வார்கள் என்று எதார்த்தமாக கேட்டுள்ளார். இதைக் கேட்டதும் போலீஸாருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. அவ்வளவுதான் அப்படிப் பேசிய அந்த கணவரை சரமாரியாக போட்டு அடிக்க ஆரம்பித்து விட்டனர்.
நடுரோட்டில் வைத்து படு அநாகரீகமாகவும், முரட்டுத்தனமாகவும் போலீஸார் நடந்து கொண்டதைப் பார்த்து அவரது மனைவி பயந்து போய் காருக்குள்ளிலிருந்து வெளியே வந்து கதறி அழுதார். தனது கணவரை விட்டு விடுமாறு அவர் பலமுறை கோரியும் காக்கிகள் காதில் ஏறவில்லை. தொடர்ந்து வெறித்தனமாக அடிப்பதிலேயே குறியாக இருந்தனர்.
இந்த நிலையில் அப்பெண்ணின் அலறல் சப்தம் கேட்டதும் பொதுக்கள் திரண்டு வந்தனர். இதைப் பார்த்த போலீஸார் அடிப்பதை நிறுத்தி விட்டு அந்த நபரை சாலையிலேயே உட்கார வைத்தனர் கொஞ்சமும் இரக்கம் இன்றி.
போலீஸாரின் இந்த அராஜகச் செயல் பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.












Click it and Unblock the Notifications