காதலுக்கு இடையூறாக வந்த 'சமூகம்'... கடலில் குதித்து சாகப் போன பெண் என்ஜீனியர்!
சென்னை: காதலுக்கு ஜாதியைக் காரணம் காட்டி பெற்றோர்கள் மறுத்ததாலும், வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததாலும் அதிர்ச்சி அடைந்த கம்ப்யூட்டர் என்ஜீனியர் கடலில் குதித்து சாகப் பார்த்தார். ஆனால் கடற்கரைக்கு காற்று வாங்க வந்தவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர்.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் அந்தப் பெண், டைடல் பூங்காவில் சாப்ட்வேர் என்ஜீனீயராகப் பணியாற்றி வருகிறார். தன்னைப் போலவே தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜீனியராகப் பணியாற்றி வரும் ஒரு இளைஞரை தீவிரமாக காதலித்து வருகிறார்.
வழக்கம் போல இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் வழக்கம் போல அப்பெண்ணின் பெற்றோர் அதெல்லாம் சரிப்படாது, காதலை மறந்து விடு என்று அட்வைஸ் கூறியுள்ளனர்.அத்தோடு வேறு மாப்பிள்ளை பார்க்கவும் ஆரம்பித்து விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்தார். வந்த வேகத்தில் கடலில் குதித்து விட்டார். கடற்கரைக்கு வந்தவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிலர் பாய்ந்து அப்பெண்ணை மீட்டனர். ரோந்து போலீஸாரும் அவரை மீட்டு சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு இன்ஸ்பெக்டர் ரியாசுதீன் அப்பெண்ணுக்கு கவுன்சிலிங் வழங்கி அறிவுரைகள் கூறினார்.அவரது பெற்றோரை அழைத்தும் அட்வைஸ் கொடுத்தார். இதையடுத்து இனிமேல் தற்கொலைக்கு முயற்சிக்க மாட்டேன். அதேசமயம், எனது காதலில் வெற்றி பெறாமலும் ஓய மாட்டேன் என்று தன்னம்பிக்கையுன் கூறி விட்டு தனது பெற்றோருடன் கிளம்பிப் போனார் அப்பெண்.
பார்க்கலாம் ஜெயிக்கப் போவது அப்பெண்ணின் தன்னம்பிக்கையா அல்லது சமூகமா என்று...












Click it and Unblock the Notifications