பாலியல் மாற்று ஆபரேஷன் செய்ய வாலிபருக்கு மும்பை ஹைகோர்ட் அனுமதி: விமானப்படை அதிகாரியை மணக்கிறார்
மும்பை: பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள 21 வயது மாணவனுக்கு மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அசாம் மாநிலம் குவாஹாட்டியைச் சேர்ந்தவர் பிதான் பருவா (21). மாணவர். அவர் தன்னை ஒரு பெண்ணாகவே நினைக்கிறார். 7ம் வகுப்பு படித்தபோது இணையதளத்தில் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை குறித்து படித்தார். அதில் இருந்து பள்ளி நேரம் போக மீத நேரத்தில் சிறு, சிறு வேலைகள் செய்து அறுவை சிகிச்சைக்காக பணம் சேர்த்து வந்துள்ளார். அவர் பெண் போல் நடந்துகொள்வதைப் பார்த்த அவரது பெற்றோர் அவரைக் கண்டித்தும், அடித்தும் உள்ளனர்.
பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளப்போவதாக அவர் கூறியதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி குவாஹாட்டியில் இருந்து மும்பைக்கு ஓடிவந்து தனது உறவினருடன் தங்கினார். ஆனால் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த அவரது தந்தை சுப்தி ரஞ்சன் பருவா மும்பைக்கே வந்துவிட்டார்.
இந்நிலையில் தன்னை சுவாதி என்று அழைக்கும் பிதான் பருவா பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அவரது பெற்றோர் மருத்துவர்களை மிரட்டியதால் அவர்கள் மும்பை உயர் நீதிமன்றம் அனுமதித்தால் அறுவை சிகிச்சை செய்வதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து பிதான் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி கோரியும், அறுவை சிகிச்சை செய்ய தனது பெற்றோர் தடையாக இருக்கக் கூடாது என்று அவர்களுக்கு உத்தரவிடக்கோரியும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றமோ அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து பிதான் தனது மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்றால் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.
அதன் பிறகு அவரது மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நீதிபதிகள் எஸ்.ஜே. வசிப்தார் மற்றும் ஏ.ஆர்.ஜோஷி அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது,
பிதான் ஒரு மேஜர். அவர் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்கலாம். அவர் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள யாரும் தடைவிதிக்க முடியாது. அவருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியது போலீசாரின் கடமை. பிதான் தனக்குள்ள அச்சுறுத்தல்கள் குறித்து கொலாபா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். அது குறித்து விசாரித்து அச்சுறுத்தல்கள் ஏதும் இருந்தால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்தி தற்கொலை செய்துகொள்வேன் என்றெல்லாம் மிரட்டல் கடிதம் எழுதக் கூடாது என்று நீதிமன்றம் பிதானை எச்சரித்தது.
பிதான் பெண்ணாக மாறிய பிறகு விமானப்படையில் விமானியாக இருக்கும் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். அவர் தற்போது கொலாபாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications