ஒரு போலிச்சாமியாரும் தமிழ்நாட்டில் இல்லை... அமைச்சர் 'முக்கிய' அறிவிப்பு!

நித்தியானந்தா, மதுரை ஆதீனம் விவகாரம் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள நிலையில், அதிலும் இந்து சமய அறநிலையத்துறையிடம் இந்து மக்கள் கட்சி உள்ளிட்டவை புகார் கூறி வரும் நிலையில், அமைச்சர் ஆனந்தனின் இந்த அறிவிப்பு கவனிப்புக்குரியதாகியுள்ளது.
சட்டசபையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர் என்.ஆர். ரங்கராஜன் பேசுகையில், தமிழகத்தில் போலி சாமியார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை காவல்துறையுடன் இணைந்து தடுக்க வேண்டும்.
கோவில் உண்டியலில் கிடைக்கும் தங்கத்தை வைத்து சாமிக்கு கவசம் செய்ய வேண்டும் என்றால் மும்பைக்கு அனுப்பி தான் உருக்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டிலேயே இந்த வசதியை உருவாக்க வேண்டும்.
தமிழ்த் திரைப்படங்களில் ஆன்மீகத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் வருகின்றன. அதைத் தடுக்க வேண்டும் என்றார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆனந்தன், போலி சாமியார்கள் கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் நடமாடிக் கொண்டிருந்தார்கள். இப்போது போலி சாமியார்கள் இல்லை. அப்படி இருப்பதாக தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்க உருக்காலை அமைப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். எனவே உறுப்பினர் அனுமதி வாங்கிக் கொடுத்தால் தமிழ்நாட்டிலேயே அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.












Click it and Unblock the Notifications