மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சம்பந்தி மறைவு
நாகர்கோவில்: மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் சம்பந்தி டாக்டர் சந்திரமோகன் நேற்று அதிகாலை நாகர்கோவிலில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் டாக்டர் சந்திரமோகன்(64). கண் மருத்துவ நிபுணரான அவர் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் சம்பந்தி ஆவார். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் பணியாற்றியவர். பின்னர் நாகர்கோவிலில் மருத்துவமனை நடத்தி வந்தார். நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், வெங்கடேஷ், கிரி என்ற மகன்களும் உள்ளனர். கிரி டாக்டராக உள்ளார். வெங்கடேஷ் அழகிரியின் மருமகன் ஆவார்.
டாக்டர் சந்திரமோகன் உடலுக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நேற்று மாலை நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
காந்தி அழகிரி, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, கயல்விழி அழகிரி ஆகியோரும் அவருடன் வந்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், எம்.எல்.ஏ. புஷ்பலீலா, ஆல்பன், நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் மகேஷ் உள்பட ஏராளமான அரசியல் பிரமுகர்கள், டாக்டர்கள் அஞ்சலி செலுத்தினர். சந்திரமோகனின் உடல் தகனம் இன்று காலை 10 மணிக்கு நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மயானத்தில் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications