Vande Bharat Train: வந்தே பாரத்.. ஏறும் முன்பே கதவு மூடினாலும் ரயிலை பிடிக்கலாம்! பயணிகள் கண்டிப்பாக அறிய வேண்டிய ரூல்ஸ்
சென்னை: வந்தே பாரத் ரயிலில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே தானியங்கி கதவுகள் மூடப்பட்டுவிடும். இதனால் கடைசி நேரத்தில் சிலர் ரயிலை தவற விட்டுவிடுவார்கள். ஆனால் இப்படி தாமதமாக வரும் பயணிகள் கூட அவசர சூழலில் ரயிலின் கடைசி பகுதியில் உள்ள குழுவினர் (Crew) பயன்படுத்தும் சிறப்பு கோச்சில் ஏற அனுமதிக்கப்படுவார்களாம். ரயில்வே ஊழியர்களின் அனுமதி மற்றும் உதவியுடன் பயணிகள் ஏறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னை - பெங்களூர், சென்னை - நெல்லை, சென்னை - கோவை, சென்னை - திருவனந்தபுரம் உள்ளிட்ட ரூட்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை முழுவதும் ஏசி வசதி கொண்டது.

வந்தே பாரத் ரயில்
அதி நவீன இண்டெரியர்களுடன் இந்த ரயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சொகுசான இருக்கை, எல்.இ.டி திரைகள், பயோ டாய்லட் என இந்த ரயில்களில் உள்ள வசதியை சொல்லிக்கொண்டே போகலாம். வந்தே பாரத் ரயில்கள் அனைத்து தானியங்கி கதவுகள் கொண்டதாகும். நிறுத்தப்படும் ரயில்வே ஸ்டேஷன்களில் சரியாக புறப்படுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பாக ரயில்களின் அனைத்து கதவுகளும் தானியங்கி முறையில் மூடப்பட்டு விடும்.
இதை பயணிகள் உள்ளிருந்தோ.. வெளியில் இருந்தோ திறக்க முடியாது. இதற்கான கட்டுப்பாடு ரயிலின் லோகோ பைலட் வசமே இருக்கும். ரயில் நிலையங்களில் இறங்கி ஸ்நாக்ஸ், வாட்டர் பாட்டில் வாங்கிவிட்டு திரும்புவதற்குள் கதவுகள் மூடப்படு ரயிலை பயணிகள் தவறவிட்ட நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுவதை பார்க்க முடிகிறது. ஆனால், வந்தே பாரத் ரயிலின் கதவுகள் மூடப்பட்டாலும், பயணிகள் ரயிலில் ஏறுவதற்கான ஒரு வழியிருக்கிறதாம். இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.
கதவுகள் மூடிக்கொண்டால்..
அதாவது, ரயிலின் கார்டு கோச் பெட்டியின் கதவு திறந்தே இருக்கும். ரயிலின் பின்புறத்தில் கடைசியாக உள்ள கார்டு கோச்சை பயணிகள் பயன்படுத்தி தங்கள் இருக்கை இருக்க கூடிய சீட்டிற்கு சென்றுவிடலாம். ரயிலை விட்டு இறங்கி விட்டாலோ அல்லது ரயிலுக்குள் ஏறிய பின் கதவுகள் மூடிக்கொண்டாலோ உடனடியாக ரயிலின் கார்டு கோச் நோக்கி பயணிகள் சென்று அந்த பெட்டி வழியாக இறங்கவோ ஏறவோ முடியும்.
பயணிகள் இறங்க வேண்டிய ஸ்டேஷனை தவறவிட்டுவிட்டால் உடனடியாக டிக்கெட் பரிசோதகரிடம் நிலமையை எடுத்து கூற வேண்டும். அவர் அடுத்து வரும் ரயில்வே ஸ்டேஷனுக்கு உரிய கட்டணம் மற்றும் டிக்கெட் இல்லாத கட்டணத்திற்கான அபராதத்துடன் அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கி விட்டுவிடுவார். பயணிகள் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இறங்காமல் விட்டுவிட்டோம் என நினைத்து உடனடியாக டிரெயின் சங்கிலிலையை பிடித்து இழுக்க வேண்டாம் என்றும் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
அதிகாரிகள் சொல்வது என்ன?
மிக மிக அவசரமான காரணங்களுக்காக மட்டுமே ரயிலின் எமெர்ஜென்சி சங்கிலியை பிடித்து இழுக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல, தானியங்கி கதவு மூடிய பிறகு அதை தானாக கையால் திறக்க முயற்சிக்கக் கூடாது எனவும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது.













Click it and Unblock the Notifications