பாக்யராஜ் இறுதி சடங்கில் கடைசி வரை நின்ற பார்த்திபன்.. கண்கலங்க வெளியிட்ட பதிவு! நெகிழ வைத்த வார்த்தை
சென்னை: தமிழ் சினிமாவில் குரு - சீடன் உறவுக்கு எடுத்துக்காட்டாக பேசப்படும் ஜோடிகளில் முக்கியமானவர்கள் கே. பாக்யராஜ் மற்றும் ஆர். பார்த்திபன். உதவி இயக்குநராக பாக்யராஜிடம் சினிமாவைக் கற்ற பார்த்திபன், பின்னர் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினாலும், கடைசி வரை தனது குருநாதரை மறக்காத சீடராகவே இருந்தார். அதற்குச் சாட்சியாகவே, பாக்யராஜின் இறுதி நிகழ்வுகளிலும் அவர் செய்த ஒவ்வொரு செயலும் ரசிகர்களை நெகிழ வைத்தது.
கதறி அழுத பார்த்திபன்
திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே உலுக்கியது. அவரது மறைவு செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே முதலில் வீட்டிற்கு ஓடி வந்தவர்களில் பார்த்திபனும் ஒருவர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோதே கண்ணீர் விட்டு அழுத அவர், "என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று சொல்லி பேச முடியாமல் திணறிய காட்சிகள் ரசிகர்களின் மனதை உடைத்தன.

பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
அதன்பிறகு இறுதி அஞ்சலி முதல் அரசு மரியாதை, இறுதி ஊர்வலம், மின் மயானத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கு வரை ஒவ்வொரு கட்டத்திலும் பார்த்திபன் உடன் இருந்தார். நடிகர் சரத்குமாருடன் சேர்ந்து பாக்யராஜின் உடலை சுமந்து சென்றதும், இறுதி ஊர்வல வாகனம் புறப்பட்டபோது அருகிலேயே நடந்து சென்றதும், குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளைச் செய்து கொண்டிருந்ததும் பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு தற்போது ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது.
பார்த்திபனின் பதிவு
அதில் அவர், "கடைசி வரை யாரோ பாடிய கண்ணதாசனுக்கே காடு வரை தானே? பாரதிராஜா சாருக்கும் அப்படித்தான்... மதுரை காட்டுராடு வரை சென்றேன். அதுவே விளிம்பு. அதற்கு பின் மண்ணுக்குள் அவர் மட்டும் சென்று விட்டார்.
இன்று என் குருநாதர் பாக்யராஜ் சாருக்காக பெசன்ட் நகர் மின் தகனம் வரை சென்றேன். எழுதுதட்டை ( லெட்டர் பேட்)... அதில் சில வெண்காகிதங்கள்... அதில் 'அன்புடன் உங்கள் பாக்யராஜ்' என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. அதை அவருடைய இதயத்தின் மீது நான் வைத்தேன். அது அவருடன் கடைசி வரை சென்றது.
கால்மாட்டில் தீபம்... நெஞ்சில் கற்பூரம் ஏற்றிய பிறகு அந்தத் தீக்குகை நோக்கி அவர் பயணம் தொடங்கியது. ஒரு சக முயற்சியாளராக அறிமுகமான பாக்யராஜை, பின்னர் என் குருவாக ஏற்றுக்கொண்டேன். அதன் பிறகு அடிபணிந்தே அவரிடம் பணியாற்றினேன். தூக்கத்தை மறந்து காலையிலேயே அலுவலகம் சென்று, அவர் அமரும் அறையை சுத்தம் செய்து, அவர் எழுதுவதற்காக Pad, Paper, Pen ஆகியவற்றை எப்போதும் தயார் நிலையில் வைத்து விடுவேன்.
இப்போதும் அந்த PPP... அவருடைய இதயத்தின் மீதே கடைசி வரை இருந்தது...". என்று நெஞ்சை உருக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன், பாக்யராஜின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, கண்கலங்கியபடி நின்றிருந்த புகைப்படத்தையும் பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.

நெகிழ வைத்த வீடியோ
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், "இது ஒரு நடிகரின் இரங்கல் பதிவு இல்லை... ஒரு சீடன் தனது குருவை வழியனுப்பிய வேதனை", "கடைசி வரை குருவுடன் இருந்தார் பார்த்திபன்", "PPP-யை இதயத்தின் மீது வைத்த சம்பவம் கண்கலங்க வைத்துவிட்டது" என்று ரசிகர்கள் உணர்ச்சிபூர்வமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திரைக்கதை மன்னன் பாக்யராஜ் இன்று உடலால் இல்லாவிட்டாலும், அவர் உருவாக்கிய சினிமாக்களும், அவர் உருவாக்கிய சீடர்களும் அவரை தொடர்ந்து வாழ வைத்துக் கொண்டே இருப்பார்கள். அந்த சீடர்களில் முதல் வரிசையில் நின்று, "குருவை கடைசி வரை நான் வழியனுப்பினேன்" என்று கண்ணீருடன் எழுதிய பார்த்திபனின் பதிவு, பாக்யராஜ் மீது அவர் வைத்திருந்த அன்புக்கு மிகப்பெரிய சாட்சியாக மாறியுள்ளது.














Click it and Unblock the Notifications