100 ரூபாய் நோட்டு செல்லாதா? பணமதிப்பிழப்பா? பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா சின்னம் இருக்கே? ஆர்பிஐ விளக்கம்
சென்னை: இந்தியாவில் மீண்டும் ஒருமுறை ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போகப் போகிறதா என்ற ஒரு தகவல் கடந்த சில நாட்களாகவே பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது... அதுவும் அன்றாடம் பயன்படுத்தும் 10, 20, 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளில், 2005ம் ஆண்டிற்கு முன்பாக அச்சிடப்பட்ட பழைய நோட்டுகள் அனைத்தும் வரும் ஜூலை 1, 2026 முதல் செல்லாததாகிவிடும் என்ற செய்தி பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியின் சின்னத்துடன், அதிகாரப்பூர்வ அறிவிப்பு போலவே சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.. இது உண்மையா?
10, 20, 50 , 100 ரூபாய் நோட்டுகளில், 2005ம் ஆண்டிற்கு முன்பாக அச்சிடப்பட்ட பழைய நோட்டுகள் அனைத்தும் ஜூலை 1, 2026 முதல் செல்லாததாகிவிடும் என்ற செய்தி பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியின் சின்னத்துடன், அதிகாரப்பூர்வ அறிவிப்பு போலவே சுற்றறிக்கை ஒன்று சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது

பழைய நோட்டுகள்
தங்களிடம் இருக்கும் பழைய நோட்டுகளை உடனடியாக வங்கிகளில் கொடுத்து மாற்றிவிட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்தப் பணம் வெறும் காகிதமாக மாறிவிடும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது..
இதைப் பார்த்ததுமே பொதுமக்கள் பதறிவிட்டார்கள்.. குழப்பம் அடைந்தனர்.. இதையடுத்து, பின்னணியில் இருக்கும் உண்மை என்ன என்பதை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பு அமைப்பான பிஐபி (PIB) மற்றும் சம்பந்தப்பட்ட மகாராஷ்டிரா வங்கி ஆகியவை ஆராய்ந்து, தற்போது முழுமையான விளக்கத்தை அளித்துள்ளன.
பொதுமக்கள் மத்தியில் பரவி வரும் அந்தச் செய்தி அப்பட்டமான ஒரு பொய் என்றும், அதற்கு எந்தவித அதிகாரப்பூர்வ அங்கீகாரமும் இல்லை என்றும் பிஐபி அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி
மேலும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி நிர்வாகமும் தங்களது சின்னத்தைப் பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் இந்த வதந்தியைப் பரப்பியுள்ளதாகக் கூறி, தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் எச்சரிக்கைப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜூலை 1 முதல் எந்தவொரு பழைய ரூபாய் நோட்டும் செல்லாது என்று தங்களது வங்கி அறிவிக்கவில்லை என்றும், பொதுமக்கள் இத்தகைய போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் வங்கித் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோல், இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) 2005ஆம் ஆண்டிற்கு முன் அச்சிடப்பட்ட மகாத்மா காந்தி வரிசை ரூபாய் நோட்டுகள் அனைத்தும் எப்போதும் போல சட்டப்பூர்வமாகச் செல்லும் என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.
கள்ள நோட்டுகள் தடுப்பு
கள்ள நோட்டுகளைத் தடுப்பதற்காகப் புதிய நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளனவே தவிர, பழைய நோட்டுகளைத் தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை. எனவே, உங்கள் கைகளில் இருக்கும் பழைய 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் தாராளமாகச் செல்லும், மக்கள் யாரும் தேவையின்றி பதற்றமடைய வேண்டாம்.
பணம் மற்றும் வங்கித்துறை சார்ந்த முடிவுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை உடனடியாக நம்பிவிட வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாக மட்டுமே செய்திகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்ற சரிபார்க்கப்படாத செய்திகளை மற்றவர்களுக்குப் பகிராமல் இருப்பதே, வதந்திகள் பரவாமல் தடுக்க நாம் செய்யும் நல்ல காரியமாகும்.












Click it and Unblock the Notifications