முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியது
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கான 2 ஆம் நாள் மாநாடு தொடங்கியது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், சரக டிஐஜிக்கள், ஐஜிக்கள், அனைத்து துறை செயலாளர்கள், வனத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டை மூன்று தனித்தனி அமர்வுகளாக நடத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

நேற்று நடைபெற்ற முதல் அமர்வில் மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை அதிகாரிகளும் இணைந்து பங்கேற்றனர். இதில் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமையே முக்கிய விவாதப் பொருளாக இருந்தது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள், செயின் பறிப்பு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக விரிவாக முதல்வர் விஜய் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. காவல்துறையின் செயல்திறன், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, மக்கள் நம்பிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
மாநாட்டில் உளவுத் துறை தகவல் சேகரிப்பு, பிடியாணைகளை விரைவாக நிறைவேற்றுவது, தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பது, ஜாமீனில் வெளிவந்துள்ள ரவுடிகளின் நடவடிக்கைகள், சாதி மோதல்களை முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் முதல்வர் நேரடியாக ஆலோசனை நடத்தினார்.
இந்த மாநாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களும் மாநாட்டில் முக்கிய இடம் பெற்றுள்ளன. 'சிங்கப்பெண்' அதிரடிப்படையின் செயல்பாடு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை, இணையவழி மோசடிகள் மற்றும் பெண்கள், குழந்தைகளை குறிவைக்கும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவான அறிக்கைகள் பெறப்பட்டன.
போதைப்பொருள் இல்லாத தமிழகம்' என்ற நோக்கில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் மாநாட்டில் முக்கிய விவாதமாக இருந்தது. பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு, கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்துவது, கள்ளச்சாராயம் ஒழிப்பு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் விஜய், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கவனம் செலுத்த வேண்டும். கட்சிக்காரர்கள் என முக்கியத்துவம் கொடுக்காமல் பொதுக்களுக்கான அரசாக இருக்க வேண்டும். கட்சிக்காரர்கள் என முக்கியத்துவம் கொடுக்காமல் பொதுமக்களுக்கான அரசாக இருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் போன்று இனி நடைபெறாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும். தவெகவினர் உட்பட அரசியல் தலையீடின்றி காவல் துறை செயல்பட அனுமதி என அதிகாரிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை முதல்வர் விஜய் வழங்கினார். அதேபோல, அரசுத் திட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர்கள்
இதைத்தொடர்ந்து, 2 வது நாள் மாநாடு தொடங்கியுள்ளது. மாநாட்டின் இரண்டாவது அமர்வில் மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். இந்த அமர்வில் அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் பயனாளிகளிடம் முழுமையாக சென்றடைந்துள்ளனவா, திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்ன, அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு துறையின் செயல்பாடுகளும் மாவட்ட அளவில் எவ்வாறு முன்னேறி வருகின்றன என்பதையும் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.
விருதுகள்
இன்று மாலை நடைபெறும் மூன்றாவது அமர்வில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இந்திய வனப்பணி (ஐஎப்எஸ்) அதிகாரிகள் இணைந்து பங்கேற்கின்றனர். வன பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடு சார்ந்த திட்டங்கள் மற்றும் மனித-விலங்கு மோதல்களை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து இந்த அமர்வில் ஆலோசனை நடைபெறுகிறது. இரண்டு நாள் மாநாட்டின் நிறைவில் முதல்வர் விஜய் அதிகாரிகளிடம் உரையாற்ற உள்ளார். அப்போது மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் வனத்துறையில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளை பாராட்டி விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications