ஊழல்கள், விலைவாசி உயர்வோடு 3 ஆண்டுகளை நிறைவு செய்தது மத்திய அரசு!

தற்போதைய மத்திய அரசு ஊழல் புகார்களால் மூழ்கிக் கொண்டிருக்கிற ஒரு நிலையில்தான் உள்ளது. நாட்டையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஊழல் ,காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், ராணுவ பேர ஊழல் என இந்தப் பட்டியல் நீள்கிறது.
கடந்த காலங்களைவிட இம்முறை மத்திய அரசு எந்த ஒரு முடிவையும் தன்னிச்சையாக எடுத்துவிட முடியாத நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பல உள்ளன. இதனால் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு, தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் போன்றவற்றில் பின்னடைவையே மத்திய அரசு சந்திக்க நேரிட்டது.
இதேபோல் லோக்பால் மசோதா விவகாரமும் கறுப்புப் பண விவகாரமும் தற்போதைய மத்திய அரசு முன் இருக்கும் பூதாகரமான விவகாரங்கள்.
எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலும் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஒரு சவாலாக இருக்கும். காங்கிரஸ், பாஜக கூட்டணிகளில் யார் வேட்பாளர் என்பதே முடிவு செய்யப்படவில்லை. ஆனால் நாங்கள் முன்னிறுத்தும் சங்மாவை ஆதரியுங்கள் என்று ஜெயலலிதாவும் நவீன்பட்நாயக்கும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிட்டனர். இதில் காங்கிரஸ் தேறியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இவற்றைவிட நாட்டின் பொருளாதார நிலைமை இன்னும் சிக்கலான விஷயமாக இருக்கிறது. நியூயார்க்கில் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசர் கெளசிக், 2014-ம் ஆண்டுக்கு முன்பு முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்றார்.
ஆனால் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியோ, பொருளாதார சரிவைக் கட்டுப்படுத்த நிச்சயம் சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்கிறார்.
தற்போதைய மத்திய அரசு என்பது மாநில அரசுகள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் நிர்பந்தத்தின் பேரில் நிர்வாகத்தை நடத்தக் கூடிய ஒரு குதிரை போல்தான் பவனி வந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications