புதுக்கோட்டையில் ஏட்டை துப்பாக்கியை காட்டி மிரட்டிய எஸ்.ஐ.க்கு டிரான்ஸ்பர்
புதுக்கோட்டை: ஏட்டை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய எஸ்.ஐ. கங்கைநாத பாண்டியனை மாற்றம் செய்து புதுக்கோட்டை எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றியவர் கங்கைநாத பாண்டியன். அவர் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ.வும், இடைத் தேர்தல் நடத்தும் அலுவலருமான முத்துமாரியின் கணவராவார். இந்த நிலையில் திருவெப்பூர் ரயில்வே கேட் அருகே எஸ்.ஐ. கங்கைநாத பாண்டியன் சமீபத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு பைக்கில் வந்த மூவரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளார். மேலும் மூவரில் ஒருவரின் செல்போனை வாங்கி வைத்துக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கீரனூர் டி.எஸ்.பி. டிரைவர் (ஏட்டு) செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளனர். அங்கு வந்த ஏட்டு செந்தில்குமார் எஸ்.ஐ.யிடம் இது குறித்து கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த எஸ்.ஐ. தனது துப்பாக்கியைக் காட்டி செந்தில்குமாரை மிரட்டியுள்ளார்.
இது குறித்து செந்தில்குமார் கீரனூர் டி.எஸ்.பி. மூலம் புதுக்கோட்டை எஸ்.பி. தமிழ்ச் சந்திரனிடம் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய எஸ்.பி. தமிழ்ச்சந்திரன் ஏட்டை துப்பாக்கியை காட்டி மிரட்டிய எஸ்.ஐ. கங்கைநாத பாண்டியனை கட்டுப்பாட்டு அறை எஸ்.ஐ. யாக மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதே போல ஏட்டு செந்தில்குமாரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications