சிகாகோவில் சர்தாரியை சந்திக்க மறுத்த ஒபாமா: பாக்.-அமெரிக்கா உறவில் மேலும் விரிசல்
வாஷிங்டன்: நேட்டோ நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை சந்திக்க அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மறுத்துவி்ட்டார்.
சிகாகோவில் நேட்டோ நாடுகளின் 2 நாள் மாநாடு நேற்று மாலை துவங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி சிகாகோ சென்றுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் நேட்டோ படை நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு அமெரி்க்க அதிபர் ஒபாமா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். ஆனால் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால் பாகிஸ்தான்-அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து எழுந்த சர்ச்சையை அடுத்து பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள நேட்டோ படையினருக்கான அமெரிக்காவின் உணவு, எரிபொருள் உள்ளிட்ட விநியோகத்திற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. இந்நிலையில் சிகாகோவில் ஒபாமாவை சந்தித்து சமாதானம் ஆகிவிடலாம் என்று நினைத்தார் சரிதாரி. ஆனால் சர்தாரியை சந்திக்க ஒபாமா மறுத்துவிட்டார்.
இருப்பினும் ஒபாமா பிசியாக இருப்பதால் அவருக்கு சர்தாரியை சந்திக்க நேரம் இல்லை என்று வெள்ளை மாளிகையின் துணை தேசிய பாதுகாப்பு செயலாளர் பென் ரோட்ஸ் தெரிவித்துள்ளார். சர்தாரியை சந்திக்க ஒபாமா மறுத்துள்ளதையடுத்து ஏற்கனவே பிரச்சனையாக உள்ள அமெரிக்கா-பாகிஸ்தான் உறவில் மேலும் விரிசல் ஏற்படும் என்று தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நேட்டோ படையினருக்கான பொருட்கள் வினியோகத்திற்கு பாகிஸ்தான் மறுபடியும் அனுமதி தரும் வரை இந்த பிரச்சனை தீராது. இந்நிலையில் வரும் 2013ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் வெளியேறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications