இந்திரா நினைவு மேடை இடிப்பு: தேமுதிக பெண் கவுன்சிலர், கணவர் மீது வழக்கு
சிவகங்கை: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவாக கட்டப்பட்டிருந்த மேடையை இடித்ததாக தேமுதிக பெண் கவுன்சிலர், அவரது கணவர் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை நகருக்கு கடந்த 1976ம் வருடம் முதன் முறையாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தார். அப்போது அவர் பேசிய இடத்திற்கு அவரது நினைவாக இந்திரா நகர் என்று பெயர் வைக்கப்பட்டது. அங்கு அவரது நினைவாக அமைக்கப்பட்டிருந்த மேடை அண்மையில் இடிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு இன்னும் 2 மாதத்தில் புது மேடை கட்டித் தரப்படும் என்று நகராட்சி தலைவர் அர்ச்சுணன் தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக சிவகங்கை நகர திமுக செயலாளர் ஆனந்த நகர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார்.
அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
27வது வார்டில் முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு சின்னமாக விளங்கிய, பொது மேடையை மே 15 க்கு முன் தேமுதிக நிர்வாகி மாரிமுத்து, அவரது மனைவியும், 27வது வார்டு கவுன்சிலருமான பரமேஸ்வரி உட்பட 10 பேர் இடித்தனர்.அதிலிருந்து 25 லோடு செங்கல், 5 லோடு குண்டு கற்களை அபகரித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
அவரது புகாரின்பேரில் தேமுதிக நிர்வாகி மாரிமுத்து, அவரது மனைவி பரமேஸ்வரி உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 19ம் தேதி சிவகங்கை வந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இந்திரா நினைவு மேடை இடிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications