போரில் சரணடைந்தவர்களை இலங்கை விடுவிக்க வேண்டும், இல்லையென்றால்...: சீமான்
சென்னை: இலங்கையில் நடந்த போருக்கு பிறகு சரண் அடைந்தவர்களை அந்நாட்டு அரசு விடுவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் தமிழினத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போருக்கு பின்னால் சரண் அடைந்தபோது போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 4000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 21/2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்க வேண்டும் என்று, கொழும்பு ரிமாண்ட் சிறையில் வைக்கப்பட்டுள்ள 204 போராளிகள் தொடர்ந்து 5 நாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
விசாரணையின்றி சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா.வும், உலகளாவிய அளவில் இயங்கும் ஆம்னஸ்டி பொது மன்னிப்பு சபை உள்பட மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இலங்கை அரசு கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. உலக நாடுகளும், ஐ.நா.வின் மனித உரிமை ஆணையமும் இலங்கை அரசுக்கு அழுத்தம் அளிக்க வேண்டும்.
இலங்கையை நட்பு நாடு என்று கூறி வரும் மத்திய அரசு, இந்த மனித உரிமை மீறல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? என்று நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்புகிறது. சட்டத்துக்கு புறம்பாக சிறைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் இலங்கை தூதரகம் முன்பு நாம் தமிழர் கட்சி மறியல் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரிக்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications