இலங்கை இறுதிப் போர் குறித்து சுதந்திரமான விசாரணை வேண்டும்: இங்கிலாந்து லேபர் கட்சி
லண்டன்: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இங்கிலாந்தின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்த 3-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொழிற்கட்சியின் தலைவரான எட் மிலிபாண்ட் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் போர் முடிவடைந்த மூன்று ஆண்டுகளாகிவிட்ட போதிலும், இலங்கை அரசால் இந்த விவகாரத்தில் பொறுப்புக் கூறும் வகையிலான நம்பகமான புலனாய்வு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவினால் கூறப்பட்ட மோசமான போர்க்குற்றங்கள் குறித்து புலனாய்வு செய்ய இலங்கை அரசு தவறிவிட்டது.
பொறுப்புக் கூறலை முன்னெடுக்கவும், நல்லிணக்க நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தவும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தினாலேயே, இறுதிப் போர் நிகழ்வுகள் குறித்து ஒரு சர்வதேச, சுதந்திரமான விசாரணை தேவை.
இலங்கைக்கு எதிரான அண்மைய ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானத்தை இதனாலேயே ஆதரித்தோம். இதனால் இலங்கை அரசாங்கம் தாம் நியமித்த குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் ஐநாவுடன் ஒத்துழைக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கம் இந்த விவகாரங்களில் எந்த விதமான ஈடுபாட்டையும் வெளிப்படுத்தாவிட்டால் அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு தமது பிரதிநிதிகளை அனுப்புவதை இங்கிலாந்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications