ஈரோடு திமுக செயற்குழு கூட்டத்தில் என்.கே.கே.பி. ராஜா, முத்துசாமி மோதல்

ஈரோடு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது மாவட்டச் செயலாளர் என்.கே.கே.பி. ராஜா பேசுகையில், நமது மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் சிலர் முத்துசாமி மாவட்ட செயலாளராக வேண்டும் என்று வேலை செய்து வருகின்றனர். அவர்கள் யார் என்று எனக்கு தெரியும்.
அதில் குறிபபாக அக்னி சந்துரு, இளைஞர் அணி பழனிசாமி, இறைவன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளிடம் விண்ணப்பங்கள் கொடுத்து, முத்துசாமி மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாகவும், அவருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றும் பலரிடம் தெரிவித்து வருகின்றனர். உறுப்பினர் விண்ணப்பங்களை கொடுக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தனர். இவர்களை பிடித்து உதைக்க வேண்டும் என்றார்.
அப்போது எழுந்த அக்னி சந்துரு, இந்த விவகாரம் பற்றி பேச இது உகந்த இடம் அல்ல. செயற்குழு கூட்டத்தில் அரசியல் மட்டுமே பேசுங்கள் என்றார்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தார்.
அப்போது முத்துசாமி பேசுகையில்,
நான் 30 வயதாக இருக்கும் போது எனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைத்தது. ஆனால் அதை நான் வைத்துக் கொள்ளவில்லை. செங்கோட்டையனுக்கு கொடுத்தேன். எனவே, எனக்கு மாவட்ட செயலாளராகும் ஆசை எல்லாம் கிடையாது. ஆனால் திமுகவில் போட்டி உண்டு.
விண்ணப்பங்களை யார் கொடுக்க வேண்டும் என தலைமை சொல்லட்டும். அதன்படி நடந்து கொள்கிறேன். மற்றவர்கள் சொல்லக் கூடாது. அப்படி செய்தால் அதை யாரும் ஏற்க மாட்டார்கள்.
திமுகவில் நான் சேரும் போது, என்னுடைய நிலையை தெரிவித்து தான் சேர்ந்தேன். ஆனால் என்னை திமுகவில் ஓரங்கட்டி வருகின்றனர். அப்படி என்னை ஓரங்கட்டினால் ஒதுங்க இடம் இருக்காது என நினைத்து செயல்படுகின்றனர். அவர்களது ஆசை ஒருபோதும் வெற்றி பெறாது. எனவே, மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டி கட்டாயம் இருக்கும் என்று சொல்லி அமர்ந்தார்.
திமுக செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் என்.கே.கே.பி. ராஜாவுக்கும், முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது ஈரோடு மாவட்ட திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட செயலாளர் பதவிக்காக மோதும் இவர்கள் இருவருமே மு.க. ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications