நிதின் கத்காரியை மீண்டும் தலைவராக்கியதற்கு தொடரும் எதிர்ப்பு: அத்வானியுடன் சுஷ்மாவும் போர்க்கொடி

மும்பையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என சலசலப்பை ஏற்படுத்தி வந்த குஜராத் முதல்வர் மோடி, கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா ஆகியோர் சமாதானம் செய்யப்பட்டு இருவரும் பங்கேற்றுவிட்டனர்.
ஆனாலும் பிரச்சனை முடிந்தபாடில்லை. தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பாஜகவின் தலைவராக மீண்டும் கத்காரியை நியமித்த விவகாரத்தை மையமாகக் கொண்டு தற்போது புயல் வீசத் தொடங்கியிருக்கிறது.
கத்காரியின் நியமனத்தில் கடும் அதிருப்தி அடைந்திருக்கும் அத்வானி இன்று மாலை மும்பையில் நடைபெற்ற கட்சியின் முக்கிய பேரணி, பொதுக்கூட்டம் இரண்டையும் புறக்கணித்துவிட்டு டெல்லி திரும்பவுள்ள நிலையில், மற்றொரு மூத்த தலைவரும் நாடாளுமன்ற மக்களவை பாஜக தலைவருமான சுஷ்மா ஸ்வராஜூம் கத்காரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறார். சுஷ்மாவும் மும்பை பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டார்.
அத்வானி, சுஷ்மாவைப் பின்பற்றி மேலும் பல பாரதிய ஜனதா தலைவர்களும் மும்பை பேரணி, பொதுக்கூட்டத்தைப் புறக்கணிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதேபோல் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிக்க வேண்டும் என்ற எதியூரப்பாவின் பேச்சும்கூட அத்வானி உள்ளிட்டோரை அதிருப்தி அடையச் செய்திருப்ப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் இறுதியில் குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தல்கள் மற்றும் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக விவாதித்து வியூகம் அமைக்க கூட்டப்பட்ட செயற்குழுக் கூட்டமானது உட்கட்சி மோதலின் உச்சத்தால் மோதலை மட்டுமே சந்தித்திருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.












Click it and Unblock the Notifications