நில ஆக்கிரமிப்பு: நெல்லை காங்கிரஸ் எம்.பி. ராமசுப்புவின் மைத்துனர் கைது
தென்காசி: அதிமுக நிர்வாகி கொடுத்த நில ஆக்கிரமிப்பு புகாரின் பேரில் காங்கிரஸ் எம்.பி. ராமசுப்புவின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகே வேளப்பநாடாரூரைச் சேர்ந்தவர் ஒன்றிய அதி்முக நிர்வாகி வைத்தியலிங்கம். அவர் சேர்ந்தமரம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி அன்று எங்கள் ஊரைச் சேர்ந்த ராஜாமணி, திருமலைசாமி ஆகியோரிடம் ரூ.10 லட்சம் மதிப்பிலான ஒரு ஏக்கர் 82.5 சென்ட் புஞ்சை நிலத்தை கிரையத்திற்கு வாங்கி அனுபவித்து வருகிறேன்.
கடந்த 20ம் தேதி எனது புஞ்சை நிலத்திற்கு செல்லும்போது திருமலாபுரத்தைச் சேர்ந்த குமரவேல் நாடார் மகன் வேலுமயில் என்பவர் என்னை வழிமறித்து நிலம் என்னுடையது, உள்ளே வரக் கூடாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததார். எனவே, எனது நிலத்தை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுத்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் முப்புடாதி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து வேலுமயிலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வேலுமயில் நெல்லை தொகுதி எம்.பி. ராமசுப்பு மனைவியின் சகோதரர் ஆவார்.












Click it and Unblock the Notifications