சொத்து தகராறில் தாய், தந்தையை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற மகன்
திண்டுக்கல்: சொத்து தகராறில் தாய், தந்தையை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற நபரை போலீசார் வலைவீசித் தேடி வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து ஊராட்சிக்குட்பட்ட முத்துகாமாபட்டியைச் சேர்ந்தவர் போஸ் (65). அவரது மனைவி பொட்டியம்மாள் (55). அவர்களின் மகன்கள் ஈஸ்வரன் (40), லிங்கசாமி (35). ஈஸ்வரனும், லிங்கசாமியும் திருமணமாகி தந்தை போஸுக்கு சொந்தமான மல்லிகை தோட்டத்தில் உள்ள வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர்.
சொத்தை பிரித்து கொடுக்குமாறு போஸிடம் லிங்கசாமி கடந்த 2 நாட்களாக கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை போஸ் தனது மனைவி மற்றும் மூத்த மகன் ஈஸ்வரனுடன் தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லிங்கசாமி சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தந்தையுடன் தகராறு செய்தார்.
தகராறு முற்றியபோது ஆத்திரம் அடைந்த லிங்கசாமி அங்கு கிடந்த மண்வெட்டியை எடுத்து தந்தையின் தலையில் அடித்தார். இதில் போஸ் ரத்த வெள்ளத்தில் தோட்டத்தில் விழுந்தார். தனது கணவர் தாக்கப்படுவதை தடுக்க வந்த பொட்டியம்மாளையும் லிங்கசாமி வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தலையில் வெட்டுபட்ட பொட்டியம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
ஈஸ்வரன் மற்றும் அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய போஸை சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொட்டியம்மாளின் உடலைக் கைப்பற்றி அதை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து லிங்கசாமியை தேடி வருகின்றனர்.
சொத்துக்காக மகனே பெற்ற தாய், தந்தையை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications