கழிவுகளால் விஷமாகும் தாமிரபரணி!
நெல்லை: தாமிரபரணி நதியை குப்பைகளும் கழிவுகளும் விஷமாக்கி வருகின்றன. மணல் அள்ளுவதால் நதியில் மீன்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக சுற்றுப்புற ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் தாகம் தீர்க்க வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்று நீரை குடிக்கவும், குளிக்கவும், சமைக்கவும் பயன்படுத்திய பொதுமக்கள் இன்று விவசாய பணிகளுக்கு கூட அந்த நீரை பயன்படுத்த அஞ்சுகின்றனர்.
ஆற்றின் கரையில் உள்ள தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், பணிமனைகள் ஆகியவற்றில் இருந்து வெளியேரும் கழிவுகள் நதியை நாசப்படுத்தி வருகின்றன. ஆற்றின் கரையில் இருக்கும் சில குடியிருப்புவாசிகள் தங்கள் பங்குக்கு நதியை அசுத்தம் செய்கின்றனர்.
கோயிலில் பூஜை செய்த பொருட்களை எறிதல், சுடுகாட்டில் புதைக்கப்பட்டவர்கள், எரிக்கப்பட்டவர்களின் சாம்பல்களையும் ஆற்றில் கலத்தல் ஆங்காங்கே நடக்கிறது.
நெல்லை மாநகர சுகாதார வளாகங்களுக்கு பூட்டு போட்டு விட்டு ஆற்றின் கரையை அனேகர் பொது கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் விளைவு பல இடங்களில் ஆற்று நீரின்தரம் மோசமாகவும், மனித பயன்பாட்டிற்கு தகுதியில்லாததாகவும் ஆகிவிட்டது.
கிருமிகள், பாதிப்பு தரக்கூடிய உலோகங்கள், சாயக்கழிவுகள், வேதிப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கலப்பதால் தாமிரபரணி ஆறு அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications