வீடுகளுக்கு சிலிண்டர் சப்ளை.. இணையதளம் மூலம் நுகர்வோரும் கண்காணிக்கலாம்
டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீடுகளுக்கு விநியோகம் செய்வதைக் கண்காணிக்கும் வகையில் இணையதளம் ஒன்றை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர்களை புக் செய்துவிட்டு அதற்குரிய எண்ணை வைத்து இணையதளத்தில் நீங்கள் டிராக் செய்து கொண்டே இருக்கலாம். உங்களுக்கான சிலிண்டரை புக்கிங் நிறுவன ஊழியர்கள் சைக்கிள் கேப்பில் அடுத்தவர்களுக்கு விற்பனை செய்தால் கையும் களவுமாக பிடித்துவிடலாம். இதற்காகன இணையதளம் விரைவில் உருவாக்கப்பட உள்ளது.
எரிவாயுவில் வீட்டுத் தேவைகளுக்கு 89 சதவீதமும் எல்.பி.ஜி. வாகனங்களுக்கு 2 விழுக்காடும் பயன்படுத்தப்படுகிறது. தொழில்துறையினருக்கு 2 விழுக்காடு பயன்படுத்தப்படுகிறது. ஒரு வீட்டுக்கு மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டர்களை ஆண்டுக்கு 4 என்ற அளவில் வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் எரிவாயு ரீபில்லிங் என்பதற்கு கட்டுப்பாடு எதுவும் இல்லை.
டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ879. ஆனால் மானியம் வழங்கப்படுவதால் ரூ399 என்ற அளவில்தான் நுகர்வோர் செலுத்தி வருகின்றனர். மானியத்துடன் கூடிய சிலிண்டர்கள் வழங்கப்படுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாகவே இணைய தளத்தை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலுன் அரசின் மானியத் தொகையை நுகர்வோரின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இத்தகைய நடவடிக்கையின் மூலமாக யார் ஏழைகள் என்பதும் யாருக்கு மானியம் அவசியமானதும் என்று கண்டறியப்பட்டு மானியத்துடன் கூடிய சிலிண்டர்கள் வழங்குவது முறைப்படுத்தப்படும் என்றும் அரசு நம்பிக்கை கொண்டிருக்கிறது.