சண்டையை விலக்கி விட்ட அதிமுக எம்.எல்.ஏ. அரங்கநாதனுக்கு பளார்! பளார்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலை தடுத்து சமாதானம் செய்யச் சென்ற அதிமுக எம்.எல்.ஏ.வை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் நெல்லிமேடு கிராமத்தில் தமிழக அரசு சார்பில் இலவச மிக்ஸி, மின்விசிறி,கிரைண்டர் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது ஊராட்சிமன்ற தலைவர் சரவணன், கவுன்சிலர் செந்தில் ஆகியோருக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் கவுன்சிலர் செந்தில், தலைவர் சரவணனை அடித்து உதைத்தார். இதில் சரவணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து கீழ் பெண்ணாத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அரங்கநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அரங்கநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அடிதடி விவகாரம் குறித்து விசாரித்து விட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தார். இதில் சமாதானம் அடையாத அந்த இரு கோஷ்டிகளும் எம்.எல்.ஏ. அரங்கநாதன் முன்பு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் தவறுதலாக எம்.எல்.ஏ.வுக்கும் அடி விழுந்தது.
இதனால் கலசப்பாக்கம் காவல் நிலையத்திற்கு ஆவேசமாக வந்த அரங்கநாதன் தன்னை தாக்கியவர்கள் மீது நவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்தார். மேலும் தனது ஆதரவாளர்களோடு காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இதனால் கலசப்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.