3 கப்பல்களில் சென்னைக்கு வந்திறங்கிய டீசல், பெட்ரோல். ..முழு வீச்சில் விநியோகம்!

பெட்ரோல் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் கிளம்பியது. இதையடுத்து திடீரென பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. முதலில் டீசலுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. பின்னர் பெட்ரோலும் இல்லை என்றார்கள். இதனால் சென்னையில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்குகள் மூடப்பட்டன.
திறந்திருந்த பங்குகளிலும் கூட நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல், டீசல் வாங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கப்பல்கள் மூலம் பெட்ரோல், டீசலை சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி குஜராத் மற்றும் கொச்சியிலிருந்து மூன்று கப்பல்களில் 51,162 மெட்ரிக் டீசல், பெட்ரோல் கொண்டு வரப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள வாடினார் என்ற இடத்தில் அமைந்துள்ள எஸ்ஸார் குழுமத்தின் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து 19,162 டன் எச்.எஸ்.டி. வகை டீசல் ஏற்றிய எம்.வி.பிரதிபா வர்ணா என்ற கப்பல் சென்னைத் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை இரவு வந்தடைந்தது. இக்கப்பலில் இருந்து இறக்கப்பட்ட டீசல் தண்டையார்பேட்டையில் உள்ள ஐ.ஓ.சி. நிறுவன சேமிப்பு டேங்கர்களுக்கு குழாய் மூலம் எடுத்து செல்லப்பட்டது.
அங்கிருந்து குழாய் மற்றும் லாரிகள் மூலம் பெட்ரோல் நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
அதேபோல எம்.வி. பிரதீபா இந்திரயானி என்ற கப்பல் மூலம் சுமார் 10 ஆயிரம் டன் எச்.எஸ்.டி. வகை டீசல் இதே இடத்திலிருந்து ஏற்றிவரப்பட்டு இறக்குவதற்கு தயார் நிலையில் சென்னைத் துறைமுகத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல கொச்சியில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலையிலிருந்து சுமார் 17 ஆயிரம் டன் எல்.டி.ஓ. வகை டீசல், 5 ஆயிரம் டன் எம்.எஸ்.ஓ. வகை பெட்ரோல் உள்ளிட்டவை ஏற்றிய எம்.வி. ஜாக் பிரேரணா என்ற கப்பல் சென்னைத் துறைமுகத்துக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று கப்பல்களில் இருந்து டீசல், பெட்ரோல் இறக்கப்பட்டு முழுவீச்சில் பெட்ரோல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் இன்றைக்குள் பற்றாக்குறை பிரச்சினை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசலை பதுக்குகிறார்களா, முறைகேடு செய்கிறார்களா என்பது குறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications