'பந்த்': பெங்களூரில் 3 பஸ்கள் எரிப்பு; பேருந்துகள் ஓடவில்லை.. சாப்ட்வேர் நிறுவனங்கள் இயங்கின!
சென்னை: பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அழைப்பு விடுத்த பாரத் பந்த் வட மாநிலங்களிலும் கர்நாடகம், கேரளத்திலும் வெற்றிகரமாக நடந்தது.
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசு உயர்த்தியதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் மட்டும் இன்றி, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை வாபஸ் பெறக் கோரியும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த பாரதீய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் அழைப்பு விடுத்தன. அதன்படி இன்று காலை முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.
இதற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.
பாஜக ஆளும் மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் முழு அளவில் இருந்தது. அதே போல சிவசேனாவின் ஆதரவு காரணமாக மகாராஷ்டிரத்திலும் பந்த் வெற்றிகரமாக நடந்தது.
உபியில் 100 சதவீதம்...
உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாடி அரசே பந்துக்கு முழு ஆதரவு அளித்துள்ளதால், இங்கு 100 சதவீதம் இயல்பு நிலை முடங்கியது. பஸ்கள், ரயில், ஆட்டோ போக்குவரத்துகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
பெங்களூரில்...
பெங்களூரில் இன்று காலையில் கடைகள் வழக்கம் போல திறந்திருந்தன. ஆனால், சிறிது நேரத்தில் மூடப்பட்டுவிட்டன. பஸ் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது.
பெங்களூரில் நேற்று இரவு உத்தரஹள்ளி, கே.ஆர்.புரம் பொம்மனஹள்ளி ஆகிய பகுதிகளில் 3 மாநகர போக்குவரத்து பஸ்கள் எரிக்கப்பட்டன. இதையே காரணம் காட்டி இன்று நகர் முழுவதும் பஸ் போக்குவரத்தை அரசு நிறுத்திவிட்டது.
இதன்மூலம் பந்தை வெற்றி பெறச் செய்ய முதல்வர் சதானந்த கெளடா தலைமையிலான பாஜக அரசு தீவிரமாக முயன்றது.
பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. ஆனால், பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்கள் இயங்குகின. ஆனால், ஊழியர்கள் குறைந்த அளவிலேயே வந்தனர்.
ஆட்டோக்கள் இயங்கினாலும் அதில் ஏறுவதற்குத் தான் கூட்டம் இல்லை. சாலைகள் பெரும்பாலும் காலியாகவே காட்சியளித்தன.
பெல்லாரி செல்லும் வழியிலும் பேருந்தின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
பந்த் நடைபெறுவதையொட்டி கர்நாடக மாநிலத்தில் 10 மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் வழக்கம்போல் ஓடின.
சென்னையில் நார்மல்...
விலை உயர்ந்த நிலையிலும் பெட்ரோல், டீஸல் கிடைக்காமல் தெருத்தெருவாக அலைந்த சென்னைவாசிகள் மத்தியில் இந்த பந்த்துக்கு எந்த ரியாக்ஷனும் இல்லை. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடின. எப்போதும் போல 100 சதவீதம் கடைகள் திறந்திருக்கின்றன.
டெல்லியில் அப்பாஸ் நக்வி கைது:
டெல்லியில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications