மதுரை கலெக்டர் சகாயத்தை டிரான்ஸ்பர் செய்ய வைத்த கல்குவாரி அதிபர்?

நேர்மையான, கண்டிப்பான அதிகாரி என்று பெயர் எடுத்த மதுரை கலெக்டர் சகாயத்தை தமிழக அரசு, கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக திடீரென மாற்றி உத்தரவிட்டது. இந்த மாறுதல் மதுரை மாவட்டத்தில் பொது மக்கள், அரசியல் கட்சி, சமூகநல அமைப்புகள் என்று பல தரப்பினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கலெக்டர் சகாயம் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நுகர்வோர் அமைப்பினர், சுதந்திர போராட்ட வீரர்கள் சமிதி, திருநங்கைகள், விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த நிலையில் சகாயம் மாற்றத்திற்கு பல சம்பவங்கள் காரணம் என்றாலும், மதுரையில் உள்ள பிரபல கல்குவாரி நிறுவனம் தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது.
இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கல் குவாரியில் சுமார் ரூ.16,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக கலெக்டர் சகாயம் கண்டறிந்தார். இது குறித்து உரிய ஆதாரங்களுடன் தமிழக அரசுக்கு விரிவான அறிக்கையை சகாயம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை தான் தென் மாவட்ட அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளதாக தெரிகிறது.
இதனால் மதுரை கலெக்டர் சகாயத்தை இடமாற்றம் செய்தே ஆக வேண்டும் என்று அந்த பிரமுகர் 2ம் கட்ட மாண்புமிகு ஒருவரிடம் வேண்டுகோள் விடுக்க, அதற்கான பலன் ஒரிரு நாட்களில் கிடைத்ததாம்.
இந்த நிலையில், மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்த அந்த அறிக்கையின் அடுத்த கட்டம் என்ன, அதன் மீது நடவடிக்கை என்ன என்பதை அறிய சமூக ஆர்வலர்கள் ஆர்வத்தோடு உள்ளனர்.
தமிழக அரசு அந்த அறிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அரசியல் பரபரப்பு நிபுணர், ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமியை நாடப் போவதாக மதுரையில் இருந்து மக்கள் குரல்கள் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications