ரன்வீர் சேனா தலைவர் சுட்டுக் கொலை- பீகாரில் பல இடங்களில் அலுவலகங்கள், பேருந்துகள் தீக்கிரை!
பாட்னா: பீகார் மாநிலத்தில் உயர்சாதியினர் உருவாக்கியிருக்கும் ஆயுதப் படையான ரன்வீர் சேனாவின் தலைவர் பிரமேஸ்வர் சிங் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று காலை சுட்டுக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் வன்முறை வெடித்துள்ளது.
ரன்வீர்சேனா அமைப்பு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக கொலை, கொள்ளை போன்ற பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் அமைப்பாகும். இந்த அமைப்புதான் பீகாரில் உயர்ஜாதி அமைப்புகளின் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு ஆபத்பாந்தவனாக இருந்து வருகிறது. 1996-ம் ஆண்டு பீகாரில் 61 தலித்துகளை படுகொலை செய்து நாட்டை உலுக்கிய சம்பவத்தில் ஈடுபட்டதும் இந்த அமைப்புதான். இதில் முக்கிய குற்றவாளியும் பிரமேஸ்வர்சிங்தான். கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை அனுபவித்துவிட்டு அண்மையில்தான் சிறையில் இருந்து விடுதலையாகி இருந்தார் பிரமேஸ்வர்சிங்.
இந்த அமைப்பின் தலைவர் பிரமேஸ்வர்சிங் இன்று தலைநகர் பாட்னாவில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் போஜ்பூர் மாவட்டத்தில் நடைபயிற்சிக்காக சென்று கொண்டிருந்த போது போது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பிரமேஸ்வரை மாவோயிஸ்டுகள்தான் சுட்டுக் கொன்றிருக்கக் கூடும் என கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பீகார் மாநில காவல்துறை தலைவர் அபய் ஆனந்தை ரன்வீர் சேனா ஆதரவாளர்காள் முற்றுகையிட்டு முதல்வர் நிதிஷ்குமார் வரும் வரை நகரவிடமாட்டோம் என்று சூழ்ந்து கொண்டனர். சிலர் அவரை தாக்கவும் முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. பெரும் போராட்டத்துக்குப் பிறகே டிஜிபியால் அங்கிருந்து வெளியேற முடிந்தது.
மேலும் பிரமேஸ்வர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் பீகார் மாநிலத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. பல அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து வன்முறை அதிகம் நிகழ்ந்துள்ள ஆரா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications