திமுக நிர்வாகி கடத்தல் வழக்கு: பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் ஜாமீன் மனு தள்ளுபடி
மதுரை: திமுக ஒன்றிய செயலாளர் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் ஜாமீன் மனுவை மதுரை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம், போகலூர் ஒன்றிய திமுக செயலாளர் கதிரவன் மதுரை ரிங்ரோடு அருகே காரில் சென்றபோது அவரை ரூ. 2 கோடி கேட்டு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கடத்திச் சென்றது. ராமநாதபுரம் திமுக எம்.பி. ஜே.கே. ரித்திஷிடம் பேசினால் அவரை வி்ட்டுவிடுவதாக அந்த கும்பல் தெரிவித்தது. இதையடுத்து கதிரவன் ரித்திஷிடம் பேசினார். அதன் பிறகு அந்த கும்பல் அவரை விடுவித்தது. உடனே கதிரவன் இது குறித்து சிலைமான் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கதிரவனை கடத்திய கேரளாவைச் சேர்ந்த சினோஜ் என்பவனை போலீசார் சுட்டு கொன்றனர். மேலும் இந்த கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.
இந்த கடத்தல் தொடர்பாக வரிச்சியூர் செல்வத்தின் தம்பி செந்தில் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள திமுக எம்.பி. ரித்திஷ் சமீபத்தில் ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி மதுரை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வரிச்சியூர் செல்வம் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) சரவணன் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.