கடலூர் படகு விபத்தில் இருவர் பலி- 7 பேர் கதி என்ன?
கடலூர்: கடலூர் சங்கொலிகுப்பத்தில் திருவிழா நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு படகில் திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 7 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.
சங்கொலி குப்பத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி இரவு நடைபெற்ற பாட்டுக்கச்சேரியைக் காண சங்கொலிகுப்பம் அருகே நொச்சிக்காடு கிராமத்தை சேர்ந்த சுமார் 20 பேர் படகில் உப்பனாற்றை கடந்து வந்தனர். பாட்டுக் கச்சேரியை பார்த்துவிட்டு அவர்கள் ஊருக்கு படகில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் படகு கவிழ்ந்தது. படகு விபத்தில் சிக்கியோரின் கூக்குரலைக் கேட்டு அருகில் உள்ள கிராமத்தினர் மீட்பு முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இதில் ராதிகா மற்றும் லோகநாயகி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 11 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் நீரில் மூழ்கிய 7 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.