கொல்லம் கடற்பரப்பில் 150 ஈழத் தமிழ் அகதிகள் தடுத்து வைப்பு
கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் கடற்பரப்பில் 150 இலங்கைத் தமிழ் அகதிகளை ஏற்றி வந்த படகு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வதாக ஈழத் தமிழர்களை படகில் ஏற்றிச் சென்ற நிலையில் இந்திய கடற்பரப்பில் இறக்கி விட்டதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொருவரிடமும் ரூ1 லட்சம் முதல் ரூ5 லட்சம் வரை பணமும் வசூலிக்கப்பட்டிருக்கிறது.
இவர்களில் பலர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. அனைவரும் தமிழகத்தில் உள்ள அகதி முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19 பெண்கள் மற்றும் 22 குழந்தைகளும் அடங்குவர்.
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் மற்றும் கோக்கோஸ் தீவுகளுக்கு ஈழத் தமிழர்களை அகதிகளாக இறக்கிவிடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பும் கூட ஈழத் தமிழர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று ஆஸ்திரேலிய கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.