கறுப்புப் பணத்துக்கு எதிரான ராம்தேவின் போராட்டத்துக்கு பாஜக முழு ஆதரவு: நிதின் கத்காரி
டெல்லி: யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தும் கறுப்புப் பணத்துக்கு எதிரான போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி ஆதரிக்கும் என்று அதன் தலைவர் நிதின் கத்காரி கூறியுள்ளார்.
டெல்லியில் கத்காரியின் வீட்டில் அவரை ராம்தேவ் இன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கத்காரி கூறியதாவது:
பாபா ராம்தேவின் கறுப்புப் பணத்துக்கு எதிரான போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் அவரது போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி ஆதரிக்கிறது. இது கட்சி வேறுபாடுகளைக் கடந்த ஒரு போராட்டம். நாட்டின் நன்மைக்கான போராட்டம்.
இவர்களது போராட்டம் எந்த ஒரு கட்சிக்கும் எதிரானது அல்ல என்பதை சோனியா காந்தி புரிந்து கொள்ள வேண்டும். கறுப்புப் பணத்தை நாட்டுக்குக் கொண்டு வருவது என்பது நாட்டின் நலன் சார்ந்ததே என்றார் அவர்..
கத்காரியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் ராம்தேவ் கூறியதாவது:
நாங்கள் நடத்தும் போராட்டம் நாட்டு மக்களுக்கானது கட்சிகளைக் கடந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட 10 அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளேன்.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி. பரதன், மார்க்சிஸ் கட்சியின் பிரகாஷ் காரத், ஐக்கிய ஜனதா தளத்தின் சரத் யாத்வ், தெலுங்குதேசத்தின் சந்திரபாபு நாயுடு, சிவசேனாவின் உத்தவ்தாக்கரே ஆகியோரை சந்திக்க உள்ளேன் என்றார்.