அமைச்சராகும் விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்.. மரிய வில்சன் வசம் செல்லும் உயர்கல்வித்துறை?
சென்னை: தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட இருக்கும் நிலையில், தவெக சார்பாக முதல்வர் விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத், ஆர்கே நகர் எம்எல்ஏ மரிய வில்சன் ஆகியோர் அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்களுடன் தவெக எம்எல்ஏ-க்களான பார்த்திபன், பர்வேஸ் ஆகியோரும் அமைச்சராகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.
தமிழக அமைச்சரவை நாளை காலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. முதல்வர் விஜய் உட்பட 10 அமைச்சர்கள் இதுவரை பதவியேற்றுள்ள நிலையில், நாளை 21 பேர் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கான அழைப்பிதழை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியில் இருந்து 2 எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர்.

வழக்கறிஞர் ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சராகின்றனர். 59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுவிட்டது. ஆனால் தவெக சார்பாக யார் யார் அமைச்சர்களாக பொறுப்பேற்கிறார்கள் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
தவெகவில் இருந்து பர்வேஸ், சேலம் பார்த்திபன், ரஞ்சித் குமார், ராஜ் குமார், மரிய வில்சன் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. முதல்வர் விஜய்யின் நண்பரான ஸ்ரீநாத் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று தெரிகிறது. தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு அமைச்சர் கீதா ஜீவனை தோற்கடித்திருந்தார் ஸ்ரீநாத்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல்வர் உட்பட மொத்தமாக 34 பேர் அமைச்சரவையில் இடம்பெறலாம். ஏற்கனவே விஜய் உட்பட 10 பேர் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளனர். நாளை காலை 21 பேர் அமைச்சராக பொறுப்பேற்கின்றனர். ஆளுநர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு முன், காலை 7.30 மணியளவில் அமைச்சரவை பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் ஏற்கனவே முதல்வர் விஜய் உட்பட ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், ராஜ்மோகன், வெங்கட்ரமணன் ஆகியோர் அமைச்சராகி இருக்கின்றனர். இந்தப் பட்டியலில் மரிய வில்சன் இணைந்தால், சென்னையில் இருந்து மட்டும் 6 பேர் அமைச்சர்களாக இருப்பார்கள். இது தவெகவினர் மத்தியில் விவாதமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications