தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி
திண்டுக்கல்: பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததாக கிடைத்த தவறான செய்தியைக் கேட்டு மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த நாராயணன், முருகம்மாள் தம்பதியின் மகள் காயத்ரி. திண்டுக்கல் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்த அவர் தேர்வு முடிவுகளை ஆவலாக எதிர்பார்த்திருந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் காயத்ரி கணித பாடத்தில் 16 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்ததாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர் மனமுடைந்தார்.
இதையடுத்து அவரது தாய் மதிப்பெண் விவரங்களை பெற கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார். அந்த நேரத்தில் காயத்ரி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சென்டரில் இருந்து வீடு திரும்பிய அவரது தாய் வீட்டுக்குள் இருந்து புகையாக வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதவைத் திறந்தார். அப்போது காயத்ரி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்து கதறி அழுதார்.
காயத்ரி உண்மையிலேயே பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் 49,45,37,56,43 என மொத்தம் 230 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தவறான தகவலால் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications