பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சின் பழுது- 5 மணி நேரம் தவித்த பயணிகள்
கடையநல்லூர்: செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் எஞ்சின் பழுது காரணமாக நின்றதால் பயணிகள் பரிதவித்தனர்.
செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு தினசரி இரவு 7 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சிவகாசி முதல் செங்கோட்டை வரையிலுள்ள மக்களின் வாழ்வோடு ஒன்றிய இந்த ரயிலை நம்பியே பல ஆயிரம் பேர் மாநகரங்களை நோக்கி சென்று வருகின்றனர்.
நேற்று இரவு 7 மணிக்கு புறப்பட்ட ரயில் தென்காசிக்கு இரவு 7.08க்கு வந்தது. அங்கிருந்து 7.10க்கு புறப்பட்டு 7.15க்கு இடைகால் என்ற ஊர் அருகே செல்லும்போது ரயில் எஞ்சினில் திடீர் பழுது ஏற்பட்டு நடுவழியிலேயே நின்று விட்டது. ரயில் முன்பதிவு செய்த பயணிகள், சாதாரண பெட்டிகளில் இருந்த பயணிகள் என ஆயிரக்கணக்கான பயணிகள், குழந்தைகளுக்கு குடிக்க தண்ணீர், சாப்பாடுமின்றி தவியாய் தவித்தனர். இரவு 9.30 மணி வரை இந்நிலை நீடித்தது.
பின்னர் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு சென்ற பயணிகள் ரயிலை பாம்புகோவில் சந்தையில் நிறுத்தி விட்டு அதன் எஞ்சின் மூலம் பொதிகை ரயிலை கடையநல்லூரில் நிறுத்தினர்.
பொதிகை ரயிலுக்கு தனி எஞ்சின் என்பதால் மதுரையில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டது. சுமார் நள்ளிரவு 12 மணி அளவில் பொதிகை ரயில் கடையநல்லூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. இதனால் 5 மணி நேரம் பொதுமக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.












Click it and Unblock the Notifications