டெக்சாஸ் மாநில முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் தமிழர் சொக்கலிங்கம் நியமனம்
டெக்சாஸ்: டெக்சாஸ் மாநில அரசின் தொழில் முறை பொறியாளர்கள் வாரியத்தின் உறுப்பினராக அமெரிக்க வாழ் இந்தியரான சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில அரசின் தொழில் முறை பொறியாளர்கள் வாரியம் தகுதி வாய்ந்த பொறியாளர்களுக்கு லைசன்ஸ் வழங்குவது, டெக்சாஸ் பொறியியல் சட்டத்தை அமல்படுத்துவது, தொழில்சார் பொறியாளர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை ஒழுங்குடுத்துவது போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் டெக்சாஸ் மாநில அரசின் தொழில் முறை பொறியாளர்கள் வாரியத்தின் உறுப்பினராக அமெரிக்க வாழ் இந்தியர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். (இவர் நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர்).
இவருடன் சேர்ந்து, எட்வர்ட் சம்மர் என்பவரையும் வாரிய உறுப்பினராக டெக்சாஸ் மாநில ஆளுநர் ரிக்கி பெர்ரி நியமித்து உத்தரவிட்டார். இவர்கள் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதி வரை இந்த பதவியில் நீடிப்பார்கள்.
எஸ்.என்.சி. லாவலின் ஹைட்ரோ கார்பன் நிறுவனத்தில் மூத்த பொறியாளராக கண்ணப்பன் பணியாற்றி வருகிறார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். மேலும் ஹட்சன் நகரில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலை நிறுவியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெக்சாஸ் மாநில அரசின் தொழில் முறை பொறியாளர்கள் வாரியத்தின் உறுப்பினராக சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்க வாழ் இந்தியர்களும், இந்தியாவில் உள்ள முக்கிய தொழில் அதிபர்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.