கூட்டத்தோடு கூட்டமாக வந்த மோசடி மன்னன்.. அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நடந்தது என்ன?
சென்னை: சேலத்தில் ரூ.300 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வின் ஸ்டார் சிவக்குமார் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்ததாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சராக பொறுப்பேற்றதற்காக வாழ்த்து தெரிவித்த வந்த கூட்டத்தோடு கூட்டமாக வின் ஸ்டார் சிவக்குமார் வந்து சென்றதாக கூறியுள்ள செங்கோட்டையன், அவருடன் தனக்கு எந்த அறிமுகமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
சேலத்தில் வின் ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்களை செய்து வந்தவர் சிவக்குமார். தங்களிடம் முதலீடு செய்பவர்களுக்கு இரட்டிப்பாக பணம் வழங்கப்படும் என்று அவர் கூறியதையடுத்து, பொதுமக்கள் பலரும் முதலீடு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் மக்களின் முதலீடு ரூ.300 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆனால் திடீரென வசூலித்த பணத்துடன் சிவக்குமார் தலைமறைவானார். இதனால் சிவக்குமார் உட்பட 30 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் பணத்தை கொடுத்திவிடுவேன் என்று கூறி சிவக்குமார் முன் ஜாமீன் பெற்றார்.
இதுநாள் வரை அந்த பணம் மக்களிடம் வழங்கப்படவில்லை. இதனால் சிவக்குமாருக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் சிவக்குமாரை கைது செய்ய போலீசார் தீவிரமாக இருக்கின்றனர். இந்த நிலையில் ரூ.300 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் சிவக்குமார் தவெகவில் இணைந்திருப்பதாக தெரிய வந்தது.
அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்து வாழ்த்து கூறி இருக்கிறார். அந்த வீடியோவை சிவக்குமார் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து தவெகவில் இணைந்துள்ளதாக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக காவல் நிலையம் சென்று முறையிட்டுள்ளனர்.
தேடப்பட்டு வரும் குற்றவாளியுடன் ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சரான செங்கோட்டையன் சந்திப்பது நியாயமா என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் அமைச்சராக பொறுப்பேற்றமைக்காக, ஆயிரக்கணக்கானோர் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக மேலே குறிப்பிட்ட நபர் வருகை தந்து சென்றிருக்கிறார். இந்த நபருடன் எனக்கு முன்பு எந்த அறிமுகமும் இல்லை. கூட்டத்தில் ஒருவராக வருகை தந்த ஒருவரை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்ததாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications