கொல்லம் கடல் பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றம்: தென்னை மரங்கள் சாய்ந்தன
கொல்லம்: கொல்லம் கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இன்று கடல் அரிப்பால் கடற்கரையோரம் இருந்த தென்னை மரங்கள் சாய்ந்தன.
கேரள மாநிலம் கொல்லம் கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக அலையின் வேகம் அதிகரித்து ஆக்ரோஷம் காட்டி வருவதால் கரைகளில் வசிக்கும் மீனவ கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
அலையின் ஆக்ரோஷ தாக்குதலில் இன்று கடற்கரை பகுதியில் இருந்த தென்னை மரங்கள் கடல் அரிப்பால் சாய்ந்து விழுந்தன. மேலும் குடிசை பகுதிகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. ஏற்கனவே சுனாமியால் வீடுகளை இழந்த மக்களுக்காக 6,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வீடுகளின் சாவியை அதிகாரிகள் மீனவ மக்களுக்கு அளிக்கவில்லை. இது அவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இனியும் வீட்டு சாவிகளை வழங்காவிட்டால் தங்கள் இனமே அழிந்துவிடும் என்று மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் வீட்டுச் சாவிகளை கொடுக்காவிட்டால் கதவுகளை உடைத்து வீடுகளில் குடிபுகவும் தயாராக இருப்பதாகவும் மீனவ கிராம மக்கள் கொந்தளிபபுடன் தெரிவித்தனர்.