நான் பார்க்கக் கூடாது என்பதற்காக வீரபாண்டியாரை வேலூருக்கு மாற்றி விட்டனர்-கருணாநிதி
சேலம் அங்கம்மாள் காலனியில் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பாதுகாப்பு வசதிகள் சரியாக இல்லாத காரணத்தால் அவரை புழல் சிறைக்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தை புழல் சிறைக்கு சென்று திமுக தலைவர் கருணாநிதி இன்று சந்திக்க திட்டமிட்டிருந்தார். இதற்காக சிறைச்சாலை முன்பு ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். கட்சியினரும் திரண்டனர்.
ஆனால் திடீரென இன்று காலையிலேயே வீரபாண்டியாரை, வேலூருக்கு கூட்டிக் கொண்டு போய் அங்குள்ள மத்திய சிறையில் அடைத்து விட்டனர். இதனால் திமுகவினர் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
இந்த நிலையில் வேண்டும் என்றே வீரபாண்டியாரை சிறை மாற்றம் செய்துள்ளதாக கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறத்து அவர் கூறுகையில்,
இதயநோயாளியான வீரபாண்டி ஆறுமுகம் வேண்டுமென்றே அழைக்கழிக்கப்படுகிறார். நான் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்திப்பதை தடுப்பதற்காகவே அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாற்றம் செய்யப்படுவது சேலம் சிறைக்கா அல்லது வேலூர் சிறைக்கா என்று கூட வீரபாண்டி ஆறுமுகத்திடம் தெரிவிக்கப்படவில்லை என்றார் அவர்.