சென்னையில் மரம் விழுந்து பலியானவர் குடும்பத்துக்கு ரூ. 29 லட்சம் தர உத்தரவு
சென்னை: சென்னையில் மரம் விழுந்து மரணமடைந்தவர் குடும்பத்திற்கு 29 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும் என்று மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பரபரப்பு தீர்ப்பு குறித்த விபரம்:
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் பெரு மழையின் காரணமாக, ஒரு மரம் காரின் மீது விழுந்ததில் நெடுஞ்சாலைத்துறையின் ஒரு அதிகாரியும், பள்ளி ஆசிரியருமான அவரது மனைவியும் பலியாயினர்.
மாநகராட்சியின் கவனக் குறைவாலேயே ஆபத்தான நிலையில் இருந்த அந்த மரம் அகற்றப்படாமல் இருந்ததால் அது முறிந்து விழுந்து, தமது பெற்றோர் உயிரிழந்தனர் எனக் கூறி, அவர்களின் மகன்,அதற்காக தனக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இத்தனை ஆண்டுகாலம் நடைபெற்ற அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு சென்னை மாநகராட்சி 29 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். மாநகராட்சியில் போதிய பணியாளர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்களது கவனக்குறைவாலேயே இப்படியான நிலை உருவாகிறது எனவும் கூறிய அவர், அரசு ஊழியர்கள் தமது கடமைகளை மேலும் எச்சரிக்கையுடன் முன்னெடுக்க வேண்டியதையே இந்தத் தீர்ப்பு எடுக்காட்டுக்கிறது என்றும் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே உள்ளூராட்சிகளின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து ஒன்றுக்கு இழப்பீடு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications