இன்று லண்டனில் ராஜபக்சேவுக்கு எதிராக ஸ்காட்லாந்து தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்
லண்டன்: ஈழத்தமிழர்களை அழித்தொழித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் லண்டன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்காட்லாந்து தமிழர் பேரவை சார்பில் இன்று லண்டனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இது குறித்து ஸ்காட்லாந்து தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்து மண்ணையும், கலாச்சாரத்தையும் ஆக்கிரமித்து சீரழித்தவர் அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சே.
சர்வாதிகார குடும்ப ஆட்சியின் தலைமைச் சதிகாரனும், மனநோயாளியுமான ராஜபக்சே பிரிட்டனுக்கு வருகை தந்துள்ளார் என்ற செய்தி ஐரோப்பிய தமிழருக்கு மட்டுமல்ல உலகத் தமிழர்களையே கடும் கோபம் கொள்ள வைத்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் குற்றவாளி ராஜபக்சே குடும்பம் தான். இதற்காக அவரும், அவரது அடிவருடிகளும் தண்டிக்கப்படும் வரை உலகின் எந்த நாட்டுக்கு சென்றாலும் அவர்களை துரத்தியடிப்போம் என்பதில் புலம்பெயர் தமிழர்கள் உணர்வோடும் உறுதியோடும் உள்ளனர்.
அந்த உணர்வினை, உறுதியை வெளிப்படுத்தும் விதமாக ஜூன் 6ம் தேதி(இன்று) லண்டனில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும்.
காலத்தால் ஒன்றுபடுவோம், கை கோர்த்து நிற்போம். கூறுபட்டு தமிழ்ச் சமுதாயம் நூறு குழுவாகத் தோன்றி மாறுபட்டுச் சிந்தித்தால் வீழ்ச்சி தான் முடிவு என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.