பங்கேற்பு பத்திரம் மூலமான வெளிநாட்டினரின் 1 லட்சம் கோடி முதலீடு திரும்பப் பெறப்பட்டது
டெல்லி: பங்கேற்புப் பத்திரங்கள் மூலமாக இந்தியாவில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டினர் கடந்த 3 மாதங்களில் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.
செலவு மற்றும் கால விரயத்தைக் குறைப்பதற்காக ஏற்கெனவே செபியிடம் பதிவு பெற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக இந்தியாவில் முதலீடு செய்வதற்காக பங்கேற்பு பத்திர நடைமுறை கொண்டு வரப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு, மொத்த வெளிநாட்டு நிறுவனங்கள் சார்ந்த முதலீட்டில் இதன் பங்களிப்பு சுமார் 50 விழுக்காடாக இருந்தது.
இந்நிலையில் கடந்த நிதிநிலை அறிக்கையில் புதிய வரிவிதிப்புக் கொள்கையை அரசு வெளியிட்டது. புதிய நடைமுறையின் காரணமாக மோரீஷஸ் போன்ற வரி குறைந்த நாடுகள் வழியாக இந்தியாவுக்கு வரும் முதலீடுகளுக்கும் வரி விதிக்கப்படலாம் என்கிற அச்சம் ஏற்பட்டது. இத்தகைய அச்சம் மற்றும் கறுப்புப் பண விசாரணை ஆகியவற்றில் சிக்கிவிடக்கூடாது என்பதால் முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இதுவரை சுமார் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டிருக்கலாம் என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ரூ. 50 ஆயிரம் கோடி அளவுக்கு மறுமுதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
பங்கேற்பு பத்திரங்கள் மூலமாக இந்தியாவில் செய்யப்பட்ட முதலீடு ரூ. 2 லட்சம் கோடியாக உயரும் என்று கடந்த மார்ச் மாதத்துக்கு முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மார்ச்சுக்குப் பிறகு படிப்படியாக முதலீடு குறைந்து போயிருக்கிறது.












Click it and Unblock the Notifications