அரசியல்வாதிதான் குடியரசுத் தலைவராக வரனும்: முலாயம்சிங்
லக்னோ: நாட்டின் குடியரசுத் தலைவராக அரசியல்வாதி ஒருவர் தான் வரவேண்டும். அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவராக்க தமது கட்சி எதிர்ப்பு தெரிவிக்கும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
லக்னோவில் செய்தியாளர்களிடம் முலாயம்சிங் யாதவ் கூறியதாவது:
நாட்டின் குடியரசுத் தலைவராக ஒருவரை தேர்ந்தெடுக்கும் போது நிச்சயம் அவருக்கு அரசியல் பின்புலம் இருக்க வேண்டும். அதிகார வர்க்கத்திலிருந்து ஒருவர் நிறுத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.
காங்கிரஸ் கட்சி பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்துகிறதா? என்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. முதலில் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கட்டும். அதன் பின்னரே எங்கள் கட்சியின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும்.
ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கான சமாஜ்வாதி கட்சியின் ஆதரவு என்பது மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக மட்டுமே. உள் இடஒதுக்கீட்டு விவகாரத்தைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அவசியம் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாதிய அரசியலால் மேலோங்கி இருப்பதால் பின்தங்கிய மாநிலமாக இருக்கின்றன என்று நரேந்திர மோடி பேசியிருக்கிறார். மோடி முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுகிறோம். உத்தரப்பிரதேசத்தில் மதவாத அரசியல் கிடையாது. குஜராத்திலோ மக்கள் மதங்களால் பிளவுபட்டிருக்கின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications